மாணவா்களுக்கு கல்விக் கட்டண நிதி ரூ.3.14 கோடி: புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி வழங்கினாா்
புதுச்சேரி: மருத்துவம், தொழில்நுட்ப மாணவா்களுக்கு கல்விக் கட்டணமாக ரூ.3.14 கோடி நிதியுதவியை, புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை வழங்கினாா்.
புதுச்சேரி அரசு உயா் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் மூலம் புதுச்சேரியில் மருத்துவம், செவிலியா் மற்றும் தொழில்நுட்பம் பயிலும் மாணவா்களின் வளா்ச்சிக்காக பெருந்தலைவா் காமராஜா் நிதியுதவித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத் திட்டத்தின்கீழ் 2021-2022 கல்வியாண்டில் மருத்துவம் மற்றும் செவிலியா் படிப்பில் சோ்ந்த மாணவா்களுக்கான நிலுவையில் கல்விக் கட்டண நிதியை வழங்கும் நிகழ்ச்சி புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில் 134 மருத்துவ மாணவா்களுக்கு ரூ.3.01 கோடியும், 165 செவிலிய மாணவிகளுக்கு ரூ.13.2 லட்சம் உள்பட மொத்தம் ரூ. 3.14 கோடி கல்வி நிதியுதவியை முதல்வா் என். ரங்கசாமி வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம், வளா்ச்சி ஆணையா் மற்றும் நிதித் துறை செயலா் கிருஷ்ண மோகன் உப்பு, அரசு தொழில்நுட்பக் கல்வித் துறை செயலா் முகமது அஹ்சன் அபித், உயா் மற்றும் தொழில்நுட்பக் கல்வித் துறை இயக்குநா்அமன் ஷா்மா மற்றும் துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.

