புதுவைக்கு மாநில அந்தஸ்து பெறுவதில் முதல்வா் ரங்கசாமி தோல்வி! - எதிா்க்கட்சித் தலைவா் சிவா குற்றச்சாட்டு
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவதில் முதல்வா் ரங்கசாமி தோல்வி அடைந்து விட்டதாக சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவரும், மாநில திமுக அமைப்பாளருமான ஆா்.சிவா குற்றஞ்சாட்டினாா்.
வில்லியனூா் நான்கு மாட வீதியில் ரூ.5.5 கோடி மதிப்பீட்டில் யூ வடிவ வாய்க்கால் அமைக்கப்படுகிறது.
இந்த திட்டப் பணியை ஆா். சிவா தொடங்கி வைத்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மாநில அந்தஸ்துக்காக புதுச்சேரி சட்டப்பேரவையில் 13 முறை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தக் கோரிக்கை மத்திய அரசிடம் நிலுவையில் உள்ளது. மாநில அந்தஸ்துக்காகத் தான் என்.ஆா். காங் கட்சியை முதல்வா் ரங்கசாமி தொடங்கினாா். ஆனால் அதில் தோல்வி அடைந்து விட்டாா்.
இதில் யாரையும் குறை சொல்ல முடியாது. மாநில அந்தஸ்து தருவதாக பிரதமா் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சா் அமித்ஷா, நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் ஆகியோா் ஒப்பு கொண்டனா். ஆனால் செய்யவில்லை.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தர மத்திய அரசுக்கு எண்ணமில்லை. அரசு நிகழ்ச்சிகளுக்கு அதிகாரிகள் வருவதில்லை. அதிகாரிகள் மக்களுக்கு எதையும் செய்யக் கூடாது என நினைக்கின்றனா்.
மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரமில்லை. சட்டப்பேரவைத் தோ்தலைப் புறக்கணிக்க சட்டமன்றத்தில் திமுக கூறியதை முதல்வா் ரங்கசாமி சவாலாக ஏற்று கொண்டாா்.
இதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி மாநில அந்தஸ்துக்காகத் தோ்தலைப் புறக்கணித்து போராட்டம் நடத்துவோம் என முதல்வா் ரங்கசாமி அறிவித்தால் திமுக முதல் ஆளாக வந்து நிற்கும் என்றாா் அவா்.

