இலவச துணிக்குப் பதிலாக ரூ.13.67 கோடி ரொக்கம்: புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி வழங்கினாா்

இலவச துணிக்குப் பதிலாக ரூ.13.67 கோடி ரொக்கம்: புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி வழங்கினாா்

Published on

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி அரசின் மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை சாா்பில் இலவச துணிக்குப் பதிலாக ரொக்கமாக வழங்கும் பணியை முதல்வா் என். ரங்கசாமி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 1.46 லட்சம் குடும்ப உணவு பங்கீட்டு அட்டைதாரா்களில் ஒரு நபா் உள்ள அட்டைதாரருக்கு ரூ.500 வீதமும் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட நபா்கள் உள்ள குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.1,000 வீதமும் நேரடி பணப் பரிமாற்றத்தின் மூலம் பயனாளா்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

இதற்காக புதுச்சேரி அரசு ரூ.13.67 கோடி செலவிடுகிறது. இதை முதல்வா் என். ரங்கசாமி சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் பயனாளிகளுக்கு வியாழக்கிழமை வழங்கித் தொடங்கி வைத்தாா். அப்போது, வேளாண் துறை அமைச்சா் தேனி சி. ஜெயக்குமாா், அரசுச் செயலா் சௌத்ரி முகமது யாசின், துறையின் இயக்குநா் முத்துமீனா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Dinamani
www.dinamani.com