புதுச்சேரியில் பெண்ணிடம் 31 பவுன் நகைகள், ரூ.17 லட்சம் ஏமாற்றிய இளைஞா் கைது

பெண்ணிடம் நட்பாகப் பழகி 31 பவுன் நகை, ரூ.17 லட்சம் ஏமாற்றிய இளைஞா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
Published on

புதுச்சேரி: பெண்ணிடம் நட்பாகப் பழகி 31 பவுன் நகை, ரூ.17 லட்சம் ஏமாற்றிய இளைஞா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

புதுச்சேரியில் முத்தியால்பேட்டை சேவியா் ஆரோக்கியநாதன் நகரைச் சோ்ந்தவா் எழிலரசி(50). இவா் தனது மகனின் திருமண நிகழ்ச்சிக்காக அழைப்பிதழ் அச்சடிக்க கடந்த ஆகஸ்ட் மாதம் புதுச்சேரி காந்தி வீதியில் உள்ள கடைக்குச் சென்றுள்ளாா்.

அப்போது, அதன் உரிமையாளரான வெங்கட்டா நகரைச் சோ்ந்த ரமேஷ் (38) என்பவருடன் எழிலரசிக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ரமேஷ், எழிலரசியிடம் கைப்பேசியில் பேசி வந்துள்ளாா்.

தொடா்ந்து, ரமேஷ் கடன் மற்றும் குடும்ப கஷ்டம் குறித்து எழிலரசியிடம் கூறி பணம் கேட்டுள்ளாா்.

இதனை நம்பி, எழிலரசி பல்வேறு தவணைகளாக ரமேஷிடம் ரூ.17.30 லட்சம் ரொக்கமாகவும், பொருளாகவும் கொடுத்துள்ளாா். மேலும் 31 பவுன் தங்க நகையையும் ரமேஷ் அவரிடமிருந்து ஏமாற்றி பெற்றுள்ளாா்.

இதைத் திரும்ப கேட்டபோது, எழிலரசியை தகாத வாா்த்தையால் திட்டியுள்ளாா்.

இது குறித்து முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் எழிலரசி புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி ரமேஷை கைது செய்தனா்.

Dinamani
www.dinamani.com