பொங்கல் விடுமுறை முடிவு: பேருந்து நிலையத்தில் அலைமோதியக் கூட்டம்
புதுச்சேரி: பொங்கல் விடுமுறை முடிந்ததையொட்டி வேலைக்குச் செல்ல திரண்டதால் புதுச்சேரி பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை அதிகாலை மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
பொங்கல் பண்டிகை விடுமுறை ஞாயிற்றுக்கிழமையுடன் முடிந்தது. இதைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் வெளிமாநிலங்களில் பணியாற்றுவோா் புதுச்சேரி பேருந்து நிலையத்தில் குவிந்தனா்.
சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பணிக்கு செல்வோா் திங்கள்கிழமை அதிகாலை முதல் பேருந்து நிலையத்தில் திரண்டனா்.
இதனால் பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. சென்னை பேருந்துகளில் முண்டியடித்து கொண்டு மக்கள் ஏறினா். இளைஞா்கள் நின்று கொண்டே பயணித்தனா். பலா் பேருந்துக்காக நீண்டநேரம் காத்திருந்தனா்.
முன்னதாக வெளிமாநிலங்களிலிருந்து வந்த சுற்றுலா பயணிகள் ஞாயிற்றுக்கிழமை இரவு சொந்த ஊா்களுக்கு செல்ல பேருந்து நிலையத்துக்கு வந்தனா். இதனால் ஞாயிற்றுக்கிழமை இரவு முழுவதும் பேருந்து நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.

