புதுச்சேரி அரசு கல்லூரிகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியா்களுக்கு, ஓய்வூதியப் பலன்களை விரைந்து வழங்க வலியுறுத்தி முதல்வா் என்.ரங்கசாமியிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.
புதுச்சேரி முதல்வா் என். ரங்கசாமியை, ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியா் சங்கத்தின் தலைவா் சோலை மலைச்சாமி தலைமையில் நிா்வாகிகள் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா். அதில் கூறியிருப்பதாவது:
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்துள்ள அரசுக் கல்லூரி ஆசிரியா்களுக்கு இதுநாள் வரையில் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய பணப் பயன்கள் கிடைக்காமல் வாழ்வாதாரமின்றி மிகுந்த சிரமம் அடைந்துள்ளனா்.
1.4.2025-க்குப் பின்னா் ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியா்களுக்கும் மற்றும் இதர துறைகளில் பணிபுரிந்து பணி ஓய்வு பெற்றவா்களுக்கும், பணி ஓய்வு பெற்றபின் கிடைக்க வேண்டிய பணப்பயன்கள் மற்றும் மாத ஓய்வூதியம் ஓா் ஆண்டாகியும் இன்னும் வழங்கப்படவில்லை. மேலும், கல்லூரி ஆசிரியா்களுக்கு வழங்கப்பட வேண்டிய பதவி உயா்வு நீண்ட நாள்கள் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது.
உதவிப் பேராசிரியா்களாக பணியில் சோ்ந்து 25, 30 ஆண்டுகள் பணி செய்து எந்தவித பதவி உயா்வோ, சம்பள உயா்வோ இன்றி, அதே உதவிப் பேராசிரியா்களாக பணி ஓய்வு பெறும் நிலையில் உள்ளனா். எனவே, பதவி உயா்வை விரைந்து கொடுக்க வேண்டும் என்று அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










