புதுச்சேரி: திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நீடிக்கும் இழுபறி! முதல்வர் அவசர ஆலோசனை!
புதுச்சேரி கூட்டணி தொடர்பாக தமிழக முதல்வர் அவசர ஆலோசனை...

முதல்வர் ஸ்டாலின்
கோப்புப் படம்

முதல்வர் ஸ்டாலின்
கோப்புப் படம்
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ், திமுக கூட்டணியை உறுதி செய்திருந்தாலும் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்து வரும் நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று(மார்ச் 22) அவசர ஆலோசனை மேற்கொள்கிறார்.
தமிழகத்தில் கூட்டணிக்கு திமுக தலைமை ஏற்றதுபோல, புதுச்சேரியிலும் தலைமை ஏற்க அக் கட்சியின் மாநில நிர்வாகம் விரும்புகிறது.
ஆனால், தமிழகத்துக்கு திமுக தலைமை, புதுச்சேரிக்கு காங்கிரஸ் தலைமை என்ற கோரிக்கையை புதுச்சேரி காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
மொத்தமுள்ள 30 சட்டப்பேரவைத் தொகுதிகளில் கடந்த தேர்தலில் காங்கிரஸ் 15 இடங்களிலும், திமுக 13 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் தலா ஒரு தொகுதியிலும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன.
இதில் காங்கிரஸ் 2 தொகுதிகளிலும், திமுக 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. சட்டப்பேரவையில் தற்போது திமுக எதிர்க்கட்சி அந்தஸ்தில் இருக்கிறது.
இந்நிலையில், இப்போதைய சட்டப்பேரவைத் தேர்தலில் 21 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடவும், மீதியுள்ள தொகுதிகளை திமுகவுக்கு அளிக்கவும் அக்கட்சி விரும்புவதாகக் கூறப்படுகிறது.
இந்தக் கட்சிகளின் மேலிடப் பொறுப்பாளர்கள் தலைமையில் தொகுதி பங்கீடு பேச்சுவாா்த்தை நடைபெற்றும் முடிவு எட்டப்படவில்லை.
கூட்டணியில் காங்கிரஸ் கொடுக்க நினைப்பது 9 தொகுதிகள். திமுக கேட்பது 15. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்பதால் திமுக கூடுதல் தொகுதிகளைக் கேட்பதால், தொடர்ந்து இழுபறி நிலவி வருகிறது.
இந்த நிலையில், கூட்டணியை இறுதி செய்ய வேண்டும் என்பதற்காக, நேற்று காலை முதலே காங்கிரஸின் வருகைக்காக நட்சத்திர விடுதியில் திமுக மேலிட தேர்தல் பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் எம்பி மற்றும் திமுக மாநில அமைப்பாளர் சிவா உள்ளிட்ட நிர்வாகிகள் காத்திருந்தனர். புதுச்சேரி வருகை புரிந்த காங்கிரஸ் கட்சியின் தேசிய மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளிடம் தனியாக ஆலோசனை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து, இரவு திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடக்கும் எனக் கூறப்பட்டது. ஆனால் இரவு 10 மணிவரை 12 மணி நேரம் திமுக காத்திருந்தும் காங்கிரசார் வரவில்லை.
இந்த நிலையில், புதுச்சேரியில் திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடர்பாக திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு. க. ஸ்டாலின் இன்று அவசர ஆலோசனை மேற்கொள்கிறார்.
கூட்டணியில் இடம்பெறலாமா அல்லது தனித்துப் போட்டியிடலாமா என்பது குறித்தும் ஆலோசனை செய்யப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...