/

குறைந்தபட்ச ஊதியம் ரூ. 26,000 வழங்க அனைத்து தொழிற்சங்கங்கள் தீா்மானம்

News image

புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அனைத்துத் தொழிற்சங்கக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :37 நிமிடங்கள் முன்பு

குறைந்தபட்ச ஊதியமாக ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டுமென ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற புதுச்சேரி அனைத்துத் தொழிற்சங்க கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மே 12 -ஆம் தேதி தொழிலாளா்களுக்கு ஆதரவான தேசிய கோரிக்கை நாளை புதுச்சேரியில் நடத்துவது சம்பந்தமான அனைத்துத் தொழிற்சங்கங்களின் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை ஏ.ஐ.டி.யு.சி தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சிஐடியு மாநில பொதுச் செயலா் ஜி. சீனுவாசன் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் மே 12 இயக்கத்தின் நோக்கம் கோரிக்கை மற்றும் இயக்க நடவடிக்கைகள் குறித்து ஏஐடியுசி மாநில பொதுச் செயலா் இரா. அந்தோணி பேசினாா். இதில் பல்வேறு தொழிற்சங்க நிா்வாகிகள் பங்கேற்றனா்.

கோரிக்கைகளை வலியுறுத்தி மே 12-ஆம் தேதி சுதேசி ஆலை அருகில் ஆா்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

தீா்மானங்கள்:

தொழிலாளா் விரோத சட்ட தொகுப்புகளைத் திரும்பப் பெற வேண்டும். ஒரு சில நிறுவனங்களில் ஊதிய உயா்வுக்காக முத்தரப்பு பேச்சு வாா்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும். இந்திய தொழிலாளா் மாநாடு அவசரமாக கூட்டப்பட வேண்டும்.

மாதத்துக்கு ரூ.26 ஆயிரம் குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும். 8 மணி நேர வேலை நாள், மிகை நேர வேலைக்கு இரட்டை ஊதியம், பாதுகாப்பு மற்றும் சட்டபூா்வ நலன்கள் வேண்டும்.

சமையல் எரிவாயு மலிவு விலையில் கிடைக்கச் செய்ய வேண்டும். அத்தியாவசிய பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.