40 ஆண்டுகளுக்குப் பிறகு காரைக்கால் - பேரளம் இடையேயான ரயில் சேவை தொடங்கியது.
காரைக்கால் - பேரளம் இடையே புதிதாக அகல ரயில் பாதை அமைக்கப்பட்டு கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் சரக்கு ரயில் போக்குவரத்து நடைபெற்றுவருகிறது. பயணிகள் ரயில் இயக்க பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தியும், உயரதிகாரிகளை சந்தித்தும் வலியுறுத்தி வந்தனர். இதையொட்டி ஓரு சில சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டன.
கடந்த மார்ச் மாத முற்பகுதியில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை சந்தித்து புதுவை மக்களவை உறுப்பினா் வெ. வைத்திலிங்கமும் இப்பாதையில் பயணிகள் ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில், இன்று(மே 20) முதல் இப்பாதையில் பயணிகள் ரயில்கள் போக்குவரத்து தொடங்கியுள்ளது.
இயக்கப்படவுள்ள ரயில்கள் முழு விவரம்
திருவாரூர் வழியாக இயக்கப்பட்டு வரும் தாம்பரம் - காரைக்கால் விரைவு ரயில் இன்று முதல் பேரளம், திருநள்ளாறு வழியாக இயக்கப்பட்டு, வேளாங்கண்ணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
வேளாங்கண்ணியில் தினமும் இரவு 9.50 மணிக்கு புறப்பட்டு நாகப்பட்டினம், காரைக்கால், திருநள்ளாறு, பேரளம், மயிலாடுதுறை வழியாக அதிகாலை 4.35 மணிக்கு தாம்பரம் சென்றடைகிறது. தாம்பரத்தில் தினமும் இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு அதே வழியில் காரைக்கால் வழியாக அதிகாலை 4.30 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடைகிறது.
மயிலாடுதுறை - வேளாங்கண்ணி இடையே பயணிகள் ரயில் தினமும் இயக்கப்படவுள்ளது.
இந்த ரயில் காலை 6.30 மணிக்கு வேளாங்கண்ணியில் புறப்பட்டு நாகப்பட்டினம், நாகூர், காரைக்கால், திருநள்ளாறு, அம்பகரத்தூர், பேரளம் வழியாக 8.40 மணிக்கு மயிலாடுதுறை சென்றடைகிறது. மயிலாடுதுறையில் மாலை 4.40 மணிக்கு புறப்பட்டு இரவு 7.20 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடைகிறது.
பேரளம், திருநள்ளாறு வழியாக மயிலாடுதுறை -காரைக்கால் இடையே தினசரி இயக்கப்படவுள்ள பயணிகள் ரயில் காலை 9.35 மணிக்கு மயிலாடுதுறையில் புறப்பட்டு முற்பகல் 11.05 மணிக்கு காரைக்கால் சென்றடைகிறது. மதியம் 12.45 மணிக்கு காரைக்காலில் புறப்பட்டு மதியம் 2.15 மணிக்கு மயிலாடுதுறை சென்றடைகிறது.
மேலும் காரைக்கால் - திருச்சி இடையே இயக்கப்படவுள்ள டெமு பயணிகள் ரயில் காரைக்காலில் காலை 6.35 மணிக்கு புறப்பட்டு நாகப்பட்டினம், திருவாரூர் வழியாக காலை 11.20 மணிக்கு திருச்சி சென்றடைகிறது. மாலை 4.45 மணிக்கு திருச்சியில் புறப்பட்டு அதே வழியாக இரவு 9.20 மணிக்கு காரைக்கால் சென்றடைகிறது.
ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்குப் பின் காரைக்கால் - பேரளம் பாதையில் பயணிகள் ரயில் இயக்கப்பட்டுள்ளது, காரைக்கால் மற்றும் சுற்றுவட்டார மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Summary
Train service between Karaikal and Peralam has resumed after 40 years.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.











