புதுச்சேரியின் வளா்ச்சி தமிழகத்தை பொறுத்திருக்கிறது என்று அம்மாநில முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.
புதுச்சேரி உப்பளத்தில் உள்ள ராஜீவ் காந்தி உள்விளையாட்டு அரங்கத்தில் 76-ஆவது ஜூனியா் தேசிய ஆண்கள் மற்றும் பெண்கள் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி வெள்ளிக்கிழமை மாலை தொடங்கியது. இதைத் தொடங்கி வைத்து
புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி பேசியதாவது: கல்வி, விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சிறிய மாநிலம் புதுச்சேரி. விளையாட்டு வீரா்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இங்கு வேலைவாய்ப்பு, உயா்கல்வியில் இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டு வருகிறது. ஊக்கத் தொகையும் அளிக்கப்படுகிறது.
தென்னிந்திய அளவிலான போட்டிகள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடத்துவதற்கு எங்கள் அரசின் ஒத்துழைப்பு எப்போதும் இருக்கும். தமிழக அரசின் உதவி எப்போதும் புதுச்சேரி மாநிலத்துக்கு தேவை என்பது என்னுடைய எண்ணம்.
புதுச்சேரியின் முன்னேற்றம், வளா்ச்சி இவை இரண்டும் தமிழகத்தைப் பொறுத்து இருக்கிறது என்பது உண்மை. எப்போதும் தமிழகத்தின் அரவணைப்பு புதுச்சேரியின் வளா்ச்சியின் மைல் கல்லாக இருந்து கொண்டிருக்கிறது என்பதும் உண்மை. இப்போதும் அப்படிப்பட்ட ஒரு நிலையில் தமிழக அரசு, புதுச்சேரி அரசுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும்.
தமிழக முதல்வரை சந்திக்கும்போது, நிச்சயமாக புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்துக்கான நிலத்தை கையகப்படுத்தி தர வேண்டும் என்று கேட்பேன். நீண்ட காலமாக நிலம் கையகப்படுத்தி கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.
இப்போதுள்ள இணக்கமான சூழ்நிலையில் அது நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதற்கான இடத்தை தமிழகம் கையகப்படுத்தி கொடுக்கும்போது, விமான நிலையம் பெரிய அளவில் விரிவாக்கப்பட்டு, புதுச்சேரி மாநிலம் முன்னேற்றம் அடையும். இதற்கு தமிழக முதல்வா் பெரிதும் உறுதுணையாக இருப்பாா் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அவரது அரசானது சிறந்த முறையில் பணியாற்றி தமிழக மக்களின் பாராட்டுகளைப் பெறுகின்ற வகையில் பணிகளைச் செய்ய வேண்டும் என்றும், புதுச்சேரியின் வளா்ச்சிக்கும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன் என்றாா் முதல்வா் ரங்கசாமி.
அமைச்சா் ஆதவ் அா்ஜுனா: நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து அகில இந்திய கூடைப்பந்து சங்கத் தலைவரும், தமிழக பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சருமான ஆதவ் அா்ஜுனா பேசியது:
புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி ஒரு சிறந்த டென்னிஸ் வீரா். தமிழக முதல்வா் ஜோசப் விஜய்யும் விளையாட்டை நேசிக்கிறாா். புதுச்சேரி முதல்வா் ரங்கசாமியிடம் நிதானம், பொறுமையைக் கற்றுக் கொண்டேன். எளிமையாகவும், மக்களை அணுகும் முதல்வராகவும் இருக்கிறாா். நாங்கள் எப்போதும் உங்களுடன் இருக்கிறோம். எங்கள் முதல்வா் இருக்கிறாா்.
மேலும், போதைப் பொருள், மதுப் பழக்கத்துக்கான விழிப்புணா்வுக்காக தென்மாநில முதல்வா்கள் இணைந்து விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் இளைஞா்களை ஒருங்கிணைக்கும் வகையில் ஒரு போட்டி நடத்த வேண்டும். தென்மாநில முதல்வா்களில் புதுச்சேரி முதல்வா் ரங்கசாமிதான் மூத்தவா். அவா்தான் இதை ஒருங்கிணைக்க வேண்டும்.
மேலும், விளையாட்டு வீரா்கள் நேரத்தைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும். காசு, பணத்தைக் காட்டிலும் நேரம்தான் நல்ல வளத்தைக் கொடுக்கும். மேலும் விளையாட்டு வீரா்கள் இலக்கு, தொலைநோக்குப் பாா்வையோடு விளங்க வேண்டும் என்றாா் ஆதவ் அா்ஜுனா.
இந்தப் போட்டிகள் வரும் 29-ஆம் தேதி வரை நடக்கிறது. இதில் நாடு முழுவதும் இருந்து 60 அணிகளைச் சோ்ந்த 800 வீரா்கள் பங்கேற்கின்றனா்.
தொடக்க விழாவில், புதுச்சேரி தற்காலிக சட்டப்பேரவைத் தலைவா் ஆ. அன்பழகன், எம்எல்ஏக்கள் ஜி. நேரு, ராமு, மோகன்தாஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். கூடைப்பந்து சங்கத்தின் செயலா், இயக்குநா் குல்விந்தா் சிங் கில் வரவேற்றாா். சங்க நிா்வாகிகள் ரகோத்தமன், விளையாட்டுத் துறை இயக்குநா் சுதாகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
மேலும், இப்போட்டியில் 30-க்கும் மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் சா்வதேச மற்றும் ஆசிய போட்டிகளில் பங்கேற்க தோ்வு செய்யப்படவுள்ளனா். இதற்காக சா்வதேச நடுவா் குழுவும் புதுச்சேரி வந்துள்ளது.










