விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காவிரி விவகாரம் தொடர்பாக புதன்கிழமையும் போராட்டங்கள் நடைபெற்றன.
திண்டிவனத்தில் திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் சார்பில், ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. திண்டிவனம் ரயில் நிலைய நடைபாதையில் விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயலர் செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ. தலைமையில் திரண்ட கட்சியினர் 300}க்கும் மேற்பட்டோர் மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
இதனைத் தொடர்ந்து, சென்னையில் இருந்து குருவாயூர் செல்லும் விரைவு ரயில் திண்டிவனம் வந்தபோது, அதனை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் மயிலம் தொகுதி எம்.எல்.ஏ. இரா.மாசிலாமணி, திண்டிவனம் தொகுதி எம்.எல்.ஏ. சீத்தாபதி சொக்கலிங்கம், மாநில திமுக மருத்துவரணித் துணைத் தலைவர் சேகர், மாவட்ட முன்னாள் துணைச் செயலர் கே.அசோகன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சேதுநாதன், செந்தமிழ்செல்வன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலர் சேரன், காங்கிரஸ் கட்சியின் நகரத் தலைவர் விநாயகம், மனித நேய மக்கள் கட்சியின் நகரச் செயலர் சையத் பாஷா உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை திண்டிவனம் டி.எஸ்.பி. திருமால் தலைமையிலான போலீஸார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர், மாலை 6 மணி அளவில் விடுவித்தனர்.
திருக்கோவிலூரில்...: திருக்கோவிலூர் ஆயுள் காப்பீட்டுக் கழக அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட திமுக செயலர் க.பொன்முடி எம்.எல்.ஏ. தலைமை வகித்தார்.
முன்னதாக, ஐந்துமுனைச் சந்திப்பில் இருந்து கூட்டணி கட்சியினர் பேரணியாக வடக்கு வீதி, பேருந்து நிலையம்,
ஒன்றிய அலுவலகச் சாலை வழியாக மருத்துவமனை சாலைக்கு வந்தனர்.
அங்கு, ஆயுள் காப்பீட்டுக் கழக அலுவலகத்தை முற்றுகையிட்டு, மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். போலீஸார் எச்சரித்ததைத் தொடர்ந்து, அனைவரும் கலைந்து சென்றனர்.
சின்ன சேலத்தில்...: சின்னசேலம் ரயில் நிலையத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு சங்கராபுரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் தா.உதயசூரியன் தலைமை வகித்தார்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சேலத்திலிருந்து விருத்தாசலம் செல்லவிருந்த பயணிகள் ரயிலை மறித்தனர். இந்தப் போராட்டத்தில் திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் 364 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதே போல, கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கள்ளக்குறிச்சி ஒன்றிய திமுக செயலர் சி.வெங்கடாசலம் தலைமையில் 9 பெண்கள் உள்பட 68 பேரை போலீஸார் கைது செய்தனர்.
நாம் தமிழர் கட்சி சார்பில்...: கள்ளக்குறிச்சியை அடுத்த வி.பாளையம் சுங்கச் சாவடி அருகே கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிஷிவந்தியம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்தக் கட்சியின் மண்டலச் செயலர் மா.கு.சு.சங்கர், சங்கராபுரம் தொகுதிச் செயலர் மாரியப்பன், கள்ளக்குறிச்சி தொகுதிச் செயலர் ரமேஷ், தியாகதுருகம் இளைஞரணிச் செயலர் சதீஷ், ரிஷிவந்தியம் தொகுதிச் செயலர் சிவா உள்பட 36 பேரை தியாகதுருகம் போலீஸார் கைது செய்தனர்.
வழக்குரைஞர்கள் சங்கத்தினர் உண்ணாவிரதம்...: இதேபோல, கள்ளக்குறிச்சி வழக்குரைஞர்கள் சங்கத்தினர் காவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, கள்ளக்குறிச்சி நீதிமன்ற வளாகத்தில் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், பேரணி மேற்கொண்டனர்.
சங்கச் செயலர் டி.சின்னத்தம்பி தலைமை வகித்தார். செயலர் அ.பழனிவேல், பொருளாளர் பி.எம்.எஸ்.ராஜேஷ்வரன், துணைத் தலைவர் டி.புரட்சி, துணைச் செயலர் வி.பச்சமுத்து, நூலகர் டி.பாண்டியன் உள்ளிட்ட வழக்குரைஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








