கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி தனியார் பள்ளி ஆசிரியை கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞர், முந்திரி மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
குறிஞ்சிப்பாடி செம்பட வீதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகள் ரம்யா (23). இவர் குறிஞ்சிப்பாடி ஆண்டி தெருவில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
விருத்தாசலம் வட்டம், ஊ.மங்கலம் அருகேயுள்ள விருத்தகிரிகுப்பத்தைச் சேர்ந்த கர்ணல் மகன் ராஜசேகர் (24).
பட்டயப் படிப்பு பயின்றுள்ள இவர், கடலூரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். ரம்யா கல்லூரியில் படித்து வந்த போது, அவரை ராஜசேகர்
ஒருதலையாக காதலித்து வந்தாராம்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை பள்ளிக்கு வந்த ரம்யாவை, பள்ளி வளாகத்தில் ராஜசேகர் வெட்டிக் கொலை செய்துவிட்டு தலைமறைவானார்.
இதுகுறித்து குறிஞ்சிப்பாடி போலீஸார் வழக்குப் பதிந்து அவரைத் தேடி வந்தனர்.
விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், சேந்தநாடு அருகே உள்ள செல்லிடப்பேசி கோபுரங்களில், அவரது செல்லிடப்பேசி எண் பயன்பாடு குறித்த போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
சேந்தநாடு அருகேயுள்ள தொப்பையான்குளம் பகுதி விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை காலை தங்களது விளைநிலங்களுக்குச் சென்றனர்.
அங்குள்ள முந்திரி மரத்தில் இளைஞர் ஒருவர் தூக்கில் சடலமாக தொங்குவதை அவர்கள் பார்த்தனர். சற்று தெலைவில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நிறுத்தப்பட்டிருந்தது.
தகவலறிந்த திருநாவலூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இதில், தற்கொலை செய்து கொண்டவர் ராஜசேகர் என்பது தெரிய வந்தது.
இதுகுறித்து குறிஞ்சிப்பாடி போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து சடலத்தைப் பார்வையிட்டனர்.
பின்னர், ராஜசேகரின் சடலத்தை உடல்கூறு ஆய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பிவைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








