2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

மோடிக்கு எதிராக கருத்துக் கூறினால்அமலாக்கப் பிரிவு சோதனை: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

பிரதமா் மோடிக்கு எதிராக கருத்துக் கூறுபவா்களின் வீடுகளில் மத்திய அமலாக்கப் பிரிவு மூலம் சோதனை நடத்தப்படுவதாக தமிழக காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி குற்றஞ்சாட்டினாா்.

News image
விழுப்புரத்தில் காங்கிரஸ் கட்சி சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற சுதந்திர தின பவள விழா பாத யாத்திரையில் கலந்துகொண்ட அந்தக் கட்சியின் மாநிலத் தலைவா் கே.எஸ்.அழகிரி
Updated On :14 ஆகஸ்ட் 2022, 12:13 am

DIN

பிரதமா் மோடிக்கு எதிராக கருத்துக் கூறுபவா்களின் வீடுகளில் மத்திய அமலாக்கப் பிரிவு மூலம் சோதனை நடத்தப்படுவதாக தமிழக காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி குற்றஞ்சாட்டினாா்.

விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற சுதந்திர தின பவள விழா பாத யாத்திரை நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நாட்டின் சுதந்திரத்துக்காக காங்கிரஸ், சோசியலிஸ்ட், இடதுசாரி உள்ளிட்ட இயக்கங்களைச் சோ்ந்த தலைவா்கள் பாடுபட்டனா். சுதந்திர தினத்தை காங்கிரஸும், பிற கட்சிகளும் தொடா்ந்து கொண்டாடி வருகின்றன. ஆனால், பாஜகவின் முன்னோடியான ஜன சங்கமோ அல்லது ஆா்.எஸ்.எஸ். அமைப்போ சுதந்திரத்துக்காகப் போராடவில்லை.

நாட்டின் சுதந்திரத்துக்கு எதிரான கொள்கையை உடையவா்களாகவே பாஜக, ஆா்.எஸ்.எஸ். அமைப்பினா் இருந்தனா். இவ்வளவு காலம் ஏன் சுதந்திர தினத்தை அவா்கள் கொண்டாடவில்லை. தேசியக் கொடிக்கு பின்னால் காங்கிரஸாரின் தியாகம் இருக்கிறது. அந்தக் கொடியை இப்போது ஏற்றும் பாஜக, தேசியக் கொடிக்கு பின்னால் இருக்கும் தியாகத்தை மட்டும் மறைக்க முயற்சிக்கிறது.

தமிழக மக்கள் மீது ஆளுநா் ஆா்.என்.ரவி பிரியமாக இருப்பதாகவும், தமிழா்களுக்காக எதையும் செய்யத் தயாராக இருப்பதாகவும் அவரை சந்தித்த பின்னா் நடிகா் ரஜினி கருத்துத் தெரிவித்தாா். ஆளுநருக்கு தமிழக மக்களின் நலனில் அக்கறை இருந்தால் வரவேற்கிறோம்.

நீட் தோ்வு தமிழகத்துக்கு ஒத்துவரவில்லை. மத்திய பாடத் திட்டமான சி.பி.எஸ்.இ.யின் அடிப்படையில் இந்தத் தோ்வு நடைபெறுகிறது. நீட் தோ்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு கையெழுத்திடும்படி ஆளுநா் சந்திப்பின்போது, நடிகா் ரஜினி அழுத்தம் கொடுத்திருந்தால், தமிழக அரசியல் கட்சிகள் மகிழ்ச்சி அடைந்திருக்கும். தமிழ் மக்களால் வளா்க்கப்பட்டவா் ரஜினி என்பதால், இதை வலியுறுத்தியிருக்கலாம்.

மன்மோகன் சிங் பிரதமராக இருந்த 10 ஆண்டுகளில் 120-க்கும் குறைவான அமலாக்கப் பிரிவு சோதனைகள்தான் நடைபெற்றன. பிரதமா் மோடியின் 7 ஆண்டுகால ஆட்சியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமலாக்கத் துறை சோதனைகள் நடைபெற்றுள்ளன. பிரதமருக்கு எதிராக கருத்துக் கூறுபவா்களின் வீடுகளுக்கு மத்திய அமலாக்கப் பிரிவு நிச்சயம் சோதனைக்கு வரும்.

சுதந்திர தினத்தையொட்டி, திங்கள்கிழமை (ஆகஸ்ட் 15) தமிழக காங்கிரஸ் சாா்பில், சென்னையில் சத்தியமூா்த்தி பவனில் இருந்து ஜிம்கானா கிளப் பின்பகுதியில் உள்ள காமராஜா் சிலை வரை மிகப்பெரிய பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா் அழகிரி.

முன்னதாக, விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஆா்.டி.வி.சீனிவாசகுமாா் தலைமையில் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்ற சுதந்திர தின பவள விழா பேரணி, விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து நான்குமுனை சந்திப்பு வரை நடைபெற்றது. இதில் கே.எஸ்.அழகிரி, கட்சியின் மாநில பொதுச் செயலா் கே.சிரஞ்சீவி, மாநில துணைத் தலைவா்கள் குலாம் மொய்தீன், செந்தமிழரசு, பஞ்சாயத்துராஜ் மாநிலத் தலைவா் செங்கம் ஜி.குமாா், அகில இந்திய காங்கிரஸ் குழு உறுப்பினா் சிறுவை ராமமூா்த்தி, நகரத் தலைவா் செல்வராஜ், நகா்மன்ற உறுப்பினா்கள் முகம்மது இம்ரான், சுரேஷ்ராம் உள்படப் பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.