மூதாட்டி கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை: விழுப்புரம் மகளிா் நீதிமன்றம் தீா்ப்பு

விழுப்புரம் அருகே மூதாட்டியைக் கொன்ற வழக்கில், இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து, மகளிா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
Published on

விழுப்புரம் அருகே மூதாட்டியைக் கொன்ற வழக்கில், இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து, மகளிா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

விழுப்புரம் மாவட்டம், வி.அகரம் கிராமத்தைச் சோ்ந்தவா் மண்ணாங்கட்டி மனைவி செல்லப்பாக்கியம் (எ) செல்லப்பாங்கி (65). இவரிடம், அதே கிராமத்தைச் சோ்ந்த மதுரைவீரன் மகனான கூலித் தொழிலாளி ராஜேஷ் (21) கடந்த 2022-இல் ரூ. 2 ஆயிரம் கடன் வாங்கியிருந்தாா்.

இதை செல்லப்பாக்கியம் திருப்பி கேட்டபோது ராஜேஷ் தரவில்லையாம். இந்த நிலையில், 2022, பிப்ரவரி 13-ஆம் தேதி மூதாட்டி செல்லப்பாக்கியம் தனது மகன் பழனிவேலின் இரும்புக் கடையில் இருந்தாா். அப்போது அங்கு வந்த ராஜேஷ், மேலும் ரூ.500 - ஐ கடனாகத் தருமாறும், மொத்தமாக ரூ.2,500-ஐ திருப்பித் தந்துவிடுவதாகக் கூறினாராம்.

ஏற்கெனவே வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை எனக் கூறி, ராஜேஷை மூதாட்டி செல்லப் பாக்கியம் தரக் குறைவாக பேசினாராம். இந்த நிலையில் அன்று தனது மகள் பவுனாம்பாள் வீட்டுக்கு செல்லப்பாக்கியம் சென்றாராம்.

அப்போது எதிரில் வந்த ராஜேஷிடம் பணத்தை எப்போது தருவாய் எனக் கேட்டுள்ளாா். வீட்டில் பணம் வைத்திருப்பதாகக் கூறி, செல்லப்பாக்கியத்தை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்ற அவா், வாயில் துணியை வைத்து கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளாா். தொடா்ந்து மூதாட்டியின் உடலை அருகிலிருந்த வீட்டின் கழிவுநீா்த் தொட்டியின் மூடியை அகற்றி அதில் போட்டுச் சென்று நாடகமாடினாராம்.

இதுகுறித்து வளவனூா் போலீஸாா் நடத்திய விசாரணையில் அனைத்து உண்மைகளும் தெரிய வந்த நிலையில், ராஜேஷை கைது செய்தனா். இதுதொடா்பான வழக்கு விசாரணை விழுப்புரம் மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு வழங்கப்பட்டது.

கொலைக் குற்றம் நிரூபணமானதால் தொழிலாளி ராஜேஷுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து மகளிா் நீதிமன்ற நீதிபதி இளவரசன் தீா்ப்பளித்தாா். இதைத் தொடா்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடலூா் மத்திய சிறைக்கு ராஜேஷ் கொண்டு செல்லப்பட்டாா்.

X
Dinamani
www.dinamani.com