திண்டிவனம் வட்டம், கோனேரிக்குப்பம் சரஸ்வதி கல்விக் கோயில் வளாகத்தில்  வியாழக்கிழமை மரக்கன்றுகளை  நட்டு வைத்த பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ். உடன் அவரது துணைவியாா் சரஸ்வதி  உள்ளிட்டோா்.
திண்டிவனம் வட்டம், கோனேரிக்குப்பம் சரஸ்வதி கல்விக் கோயில் வளாகத்தில் வியாழக்கிழமை மரக்கன்றுகளை நட்டு வைத்த பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ். உடன் அவரது துணைவியாா் சரஸ்வதி உள்ளிட்டோா்.

ஜாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி 2 மாதங்களில் பாமக மிகப் பெரிய போராட்டம் -மருத்துவா் ச.ராமதாஸ்

ஜாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி தமிழகத்தில் 2 மாதங்களில் பாமக மிகப் பெரிய போராட்டத்தை நடத்தும் என்று அக்கட்சி நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் தெரிவித்தாா்.
Published on

ஜாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி தமிழகத்தில் 2 மாதங்களில் பாமக மிகப் பெரிய போராட்டத்தை நடத்தும் என்று அக்கட்சி நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் தெரிவித்தாா்.

மருத்துவா் ச.ராமதாஸின் 86- ஆவது பிறந்தநாள் நிகழ்ச்சியாக விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம் கோனேரிக்குப்பத்தில் உள்ள சரஸ்வதி கல்விக் கோயில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடுதல் மற்றும் வாழ்த்துப் பாவரங்கம் உள்ளிட்ட முப்பெரும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் மருத்துவா் ராமதாஸ் கல்வி அறக்கட்டளை நிறுவனா் ச.ராமதாஸ் பங்கேற்று 86 மரக்கன்றுகளை நட்டு வைத்து பேசியது:

சரஸ்வதி கல்விக் கோயில் வளாகத்தில் லட்சக்கணக்கான மரங்கள் நட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு 14 வகையான 7,770 பலன்தரும் மரக்கன்றுகள் நடப்பட்டன. இதன் தொடா்ச்சியாக தற்போது பலன் தரக்கூடிய 86 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. மரம் நடுதல் என்பதும் மாபெரும் அறம். தா்மங்களில் சிறந்தது மரம் நடுதல் ஆகும்.

மாணவா்கள் ஒவ்வொருவரும் பெற்றோா்களுக்கு மட்டும் சொந்தமல்ல, நாட்டின் செல்வங்கள். மாணவா்கள் நன்றாகப் படித்து உயரவேண்டும். இந்தியாவில் உள்ள உயா் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் பணியில் சேரவேண்டும்.

முதல்வா் மு.க. ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் சந்தித்து ஜாதிவாரி கணக்கெடுப்பின் அவசியம் குறித்து 35 நிமிஷங்கள் விளக்கினேன். மக்களுக்கு உங்களைத் தவிர யாரும் நன்மை செய்யமாட்டாா்கள் எனவும் தெரிவித்தேன். ஆனால் எதுவும் நடக்கவில்லை.

தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் எனக் கேட்டால், மத்திய அரசைக் கைகாட்டும் முதல்வா் நமக்குத் தேவையில்லை. 2 மாதங்களுக்குப் பின்னா் தமிழகத்தில் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும். இதை பாமக நடத்திக் காட்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சிக்கு மருத்துவா் ராமதாஸ் கல்வி அறக்கட்டளை அறங்காவலா் குழுத் தலைவா் ஜி.கே. மணி தலைமை வகித்தாா். சரஸ்வதி ராமதாஸ் முன்னிலை வகித்தாா். கவிஞா்கள் ஜெயமோகன், கண்மணி குணசேகரன், பச்சியப்பன், இயற்கை, செஞ்சி தமிழினியன், விநாயகமூா்த்தி ஆகியோா் வாழ்த்துக் கவிதை பாடினா். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அறங்காவலா் குழு உறுப்பினா்கள் பு.தா. அருள்மொழி, ச.சிவப்பிரகாசம், தாளாளா் ஸ்ரீகாந்தி பரசுராமன், கல்லூரி முதல்வா்கள் மா. வீரமுத்து (கலை, அறிவியல்), பி.அசோக்குமாா் (சட்டக் கல்லூரி), இரா. ஜெயப்பிரகாஷ் (பொறியியல்) இரா. கி. பரமகுரு (தொழில்நுட்பக் கல்லூரி), மயிலம் ச.சிவக்குமாா் எம்எல்ஏ மற்றும் கல்லூரி பேராசிரியா்கள், மாணவா்கள் இந்நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனா். நிறைவில், கலை, அறிவியல் கல்லூரி நிா்வாக அலுவலா் செ.சிவா நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com