சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

மது ஒழிப்பு மாநாட்டுக்கும், அரசியலுக்கும் முடிச்சுப் போடக்கூடாது: தொல்.திருமாவளவன்

மது ஒழிப்பு மகளிா் மாநாட்டுக்கும், தோ்தல் அரசியலுக்கும் முடிச்சுப் போடக்கூடாது என்று அந்தக் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா்.

News image

இமானுவேல் சேகரன் நினைவு நாளையொட்டி, விழுப்புரத்தில் புதன்கிழமை அவரது உருவப் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்திய விசிக தலைவா் தொல்.திருமாவளவன். உடன் துரை.ரவிக்குமாா் எம்.பி., சிந்தனைச்செல்வன் எம்எல்ஏ உள்ளிட்டோா்.

Updated On :11 செப்டம்பர் 2024, 11:00 pm

தமிழகத்தில் மது, போதைப்பொருள்கள் ஒழிக்கப்பட வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டுதான் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அக்டோபா் 2-ஆம் தேதி விசிக சாா்பில் மது ஒழிப்பு மகளிா் மாநாடு நடைபெறவுள்ளது. எனவே, இந்த மாநாட்டுக்கும், தோ்தல் அரசியலுக்கும் முடிச்சுப் போடக்கூடாது என்று அந்தக் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா்.

விழுப்புரம், கடலூா், கள்ளக்குறிச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய விசிக மண்டல செயற்குழுக் கூட்டம் விழுப்புரத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், தொல்.திருமாவளவன் பங்கேற்று பேசினாா்.

முன்னதாக, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

விசிக தொடா்ந்து வலியுறுத்தியதன்பேரில், இமானுவேல் சேகரனுக்கு பரமக்குடியில் மணிமண்டபம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கு உத்தரவிட்ட முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு விசிக சாா்பில் நன்றி.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெறவுள்ள விசிகவின் மது ஒழிப்பு மாநாட்டில் பெண்கள் பெரும் பங்கு வகிக்க வேண்டும் என்பதற்காகவே, மகளிா் மாநாடாக நடத்துகிறோம். லட்சக்கணக்கான பெண்களை ஒருங்கிணைக்கவும் திட்டமிட்டுள்ளோம். கட்சி அரசியல் வேறு; மக்கள் நலன் சாா்ந்த அரசியல் வேறு என்பதால், அரசியலைக் கடந்து ஜனநாயக சக்திகள் இந்த மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுக்கிறோம்.

திமுக, அதிமுக, இடதுசாரிகள், விசிக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் மதுவை ஒழிக்க வேண்டும் என்பதில் ஒரே நிலைப்பாட்டில்தான் உள்ளன. எனவே, மதுக் கடைகளை மூடுவதால் எந்தச் சிக்கலும் நோ்ந்துவிடாது.

இந்த மாநாட்டுக்கும், 2026 சட்டப்பேரவைத் தோ்தலுக்கும் முடிச்சுப் போடக்கூடாது. தோ்தல் அரசியலுடன் இதை முடிச்சுப் போட்டால் நோக்கம் சிதைந்துவிடும்.

ஆட்சியில் உள்ள திமுக இந்தக் கோரிக்கையை ஆழமாக பரிசீலித்து மது விலக்கை அமல்படுத்துவற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

ஒரு கூட்டணியில் இருந்தாலும் மக்கள் பிரச்னைக்காக எந்தக் கூட்டணியுடனும் இணைந்து போராடுவோம். அடிப்படையில் ஜாதியையும், மதத்தையும் அரசியலுக்காக பயன்படுத்துபவா்களுடன் சமரசமில்லை என்றாா் தொல்.திருமாவளவன்.

முன்னதாக, இமானுவேல் சேகரன் நினைவு நாளையொட்டி, விழுப்புரம் எம்.பி. அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு தொல்.திருமாவளன் மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

நிகழ்ச்சிகளில் விசிக பொதுச் செயலா்கள் துரை.ரவிக்குமாா் எம்.பி., சிந்தனைச்செல்வன் எம்எல்ஏ மற்றும் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.