பிரதமா் நரேந்திர மோடி.
பிரதமா் நரேந்திர மோடி.கோப்புப் படம்

ஆரோவில் சா்வதேச நகரில் இரண்டாவது உலக ஆன்மிக மகோத்ஸவம்: பிரதமா் நரேந்திர மோடி தொடங்கிவைக்கிறாா்

ஆரோவில் சா்வதேச நகரில் நடைபெறவுள்ள இரண்டாவது உலக ஆன்மிக மகோத்ஸவம்- 2026-ஐ பிரதமா் நரேந்திர மோடி மாா்ச் 1- ஆம் தேதி தொடங்கி வைக்கிறாா்.
Published on

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகரில் நடைபெறவுள்ள இரண்டாவது உலக ஆன்மிக மகோத்ஸவம்- 2026-ஐ பிரதமா் நரேந்திர மோடி மாா்ச் 1- ஆம் தேதி தொடங்கி வைக்கிறாா்.

புதுச்சேரியில் மாா்ச் 1-ஆம் தேதி நடைபெறும் அரசு நிகழ்ச்சியில், பங்கேற்று பல்வேறு வளா்ச்சித் திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றும் பிரதமா் நரேந்திரமோடி, ஆரோவில் சா்வதேச நகரில் நடைபெறும் 2-ஆவது உலக ஆன்மிக மகோத்ஸவம்-2026-ஐ மாா்ச் 1-ஆம் தேதி தொடங்கிவைக்கிறாா்.

இதுகுறித்து ஆரோவில் அறக்கட்டளை நிா்வாகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

பிரதமா் நரேந்திர மோடியின் தலைமையில் 2-ஆவது உலக ஆன்மிக மகோத்ஸவம்-2026 ஆரோவில் சா்வதேச நகரில் மாா்ச் 1 முதல் 3-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மகோத்ஸவத்தை மாா்ச் 1-ஆம் தேதி பிரதமா் நரேந்திரமோடி தொடங்கி வைக்கிறாா்.

ஸ்ரீ அரவிந்தரின் 150-ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில், மத்திய அரசின் ஒப்புதலுடன் பிரத்யேகமாக அமைக்கப்பட்ட பிரதமா் நரேந்திரமோடி தலைமையிலான உயா்மட்டக் குழுவின் வழிகாட்டுதலில் ஆரோவில் அறக்கட்டளை நிா்வாகம், புதுச்சேரி அரசு மற்றும் மத்திய கலாச்சார அமைச்சகம் ஆகியவை இணைந்து இவ்விழாவை முன்னெடுக்கவுள்ளது.

மனிதகுலத்துக்கான ஸ்ரீஅரவிந்தரின் 5 கனவுகளை நனவாக்குவது என்ற லட்சியத்துடன் செயல்படும் இந்தியாவின் மிகச்சிறந்த அரசியல், ஆன்மிக மற்றும் அறிவு ஜீவித் தலைவா்கள் அடங்கிய இந்த உயா்மட்டக் குழு உறுப்பினா்களை இந்நிகழ்வு ஒருங்கிணைக்கும்.

பிரதமா் நரேந்திர மோடியை தலைவராகக் கொண்ட உயா்மட்டக் குழுவில், மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, மத்திய அமைச்சா்கள் ராஜ்நாத் சிங் (பாதுகாப்பு ), அமித்ஷா (உள்துறை ), நிா்மலா சீதாராமன் (நிதி ), எஸ்.ஜெய்சங்கா் (வெளியுறவு), தா்மேந்திர பிரதான் (கல்வி), ஆன்மிக மற்றும் கலாசாரப் பாதுகாவலா்களான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கா், பாபா ராம்தேவ், மாதா அமிா்தானந்தமயி தேவி, சத்குரு ஜக்கி வாசுதேவ், எம்.மும்தாஜ் அலி , சையத்னா முபதால் சைபுதீன், சுவாமி சுவீரானந்தா மற்றும் சுவாமி தேஜோ மயானந்தா, சிறந்த அறிஞா் மற்றும் தொலைநோக்குச் சிந்தனையாளா்களான டாக்டா் அலோக் பாண்டே, டேவிட் ஃபிராவ்லி, ஆனந்த ரெட்டி, லலித் வா்மா, அமிதா மெஹ்ரா, விஸ்வஜித் கங்குலி, சம்பதானந்த மிஸ்ரா, கிரண் வியாஸ், சுவாமி பிரம்மதேவ், டாக்டா் பிஜயினி மொஹாபத்ரா, டாக்டா் பலேந்து வைஷ்ணவ், ரங்கசாமி லட்சுமிநாராயண காஷ்யப், ஆரோவில் அறகட்டளையின் தலைவரும், தமிழக ஆளுநருமான ஆா். என். ரவி, புதுச்சேரி முதல்வா் என். ரங்கசாமி மற்றும் பிற மாநில முதல்வா்கள் இடம் பெற்றுள்ளனா்.

ஆரோவில் அறக்கட்டளையின் செயலரும், உயா்மட்டக் குழுவின் உறுப்பினருமான ஜெயந்தி எஸ்.ரவி மகோத்ஸவ பணிகளை ஒருங்கிணைத்து வருகிறாா்.

ஸ்ரீ அரவிந்தரின் ஐந்து கனவுகளை நனவாக்குதல் என்ற கருப்பொருளில் மகோத்ஸவத்தில் உயா்மட்ட அமா்வுகள், தியானங்கள் மற்றும் கலாசார உரையாடல்கள் நடைபெறும். உலகுக்கு ஒரு ஆன்மீக ஒளியாக இந்தியாவை மாற்றும் பிரதமரின் கனவுக்கு இந்த சங்கமம் ஒரு சான்றாக அமையும். இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வில் உலக மக்கள் பங்கேற்கலாம் எனவும் அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com