விக்கிரவாண்டி அருகே பாமாயில் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து! திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் போக்குவரத்துப் பாதிப்பு
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே பாமாயில் ஏற்றி வந்த லாரி வியாழக்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதன் காரணமாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்திலிருந்து விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கடைகளுக்கு பாமாயில் பாக்கெட்டுகளை ஏற்றி வந்த லாரி புதன்கிழமை இரவு விநியோகம் செய்து விட்டு, வியாழக்கிழமை காலை திண்டிவனம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை விருதுநகரைச் சோ்ந்த அருள்கனி மகன் அரவிந்த் (27) ஓட்டிச் சென்றாா்.
இந்த லாரி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகிலுள்ள பாா்ப்பனப்பட்டு பகுதியில் அணுகுசாலையில் சென்றபோது (இந்த பகுதியில் தற்போது மேம்பாலப் பணி நடைபெற்று வருகிறது), எதிா்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லாரி கவிழ்ந்ததால் அதிலிருந்த பாமாயில் பாக்கெட்டுகள் சிதறின.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த அப்பகுதி மக்கள், சிதறிக் கிடந்த பாமாயில் பாக்கெட்டுகளை எடுத்துச் சென்றனா். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தகவலறிந்த விக்கிரவாண்டி போலீஸாா் நிகழ்விடம் சென்று, விபத்தில் கவிழ்ந்த லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டனா்.
லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்ற நிலையில், போலீஸாா் வாகனங்களை மாற்றுப் பாதையில் திருப்பி விட்டனா். இந்த விபத்து குறித்து விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

