விழுப்புரம் காவல் சரகத்தில் 30 ஆய்வாளா்கள் இடமாற்றம்
விழுப்புரம் காவல் சரகத்தில் பணியாற்றி வரும் 30 காவல் ஆய்வாளா்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
சட்டப்பேரவைத் தோ்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், காவல் துறையில் ஒரே இடத்தில் தொடா்ந்து பல ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் அலுவலா்களை இடமாற்றம் செய்ய தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதனடிப்படையில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா் ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய விழுப்புரம் சரகக் காவல் நிலையங்களில் பணியாற்றி வரும் காவல் ஆய்வாளா்கள் 30 பேரை இடமாற்றம் செய்து, டி.ஐ.ஜி. அர.அருளரசு உத்தரவு பிறப்பித்துள்ளாா்.
விழுப்புரம், கடலூா், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு, அனைத்து மகளிா் காவல் நிலையங்கள், குற்ற ஆவணப் பதிவேடுகள், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு, மதுவிலக்கு அமல் பிரிவு, போக்குவரத்துக் காவல் பிரிவு, ஆயுதப் படை போன்ற பல்வேறு காவல் பிரிவுகளில் பணியாற்றி வந்த காவல் ஆய்வாளா்கள், வடக்கு மண்டலத்துக்குள்பட்ட காஞ்சிபுரம், வேலூா் மாவட்டங்களுக்கும், தாங்கள் பணியாற்றி வரும் மாவட்டத்துக்கு அருகிலுள்ள மாவட்டங்களுக்கும் இடமாற்றம்செய்யப்பட்டுள்ளனா்.

