ரயிலில் உரிய ஆவணமில்லாத 10.5 கிலோ வெள்ளி பறிமுதல்
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் விரைவு ரயிலில் உரிய ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட பத்தரை கிலோ வெள்ளிப் பொருள்களை ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாா் பறிமுதல் செய்து வணிகவரித் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.
சென்னையிலிருந்து- மயிலாடுதுறை வழியாக திருச்சி செல்லும் சோழன் விரைவு ரயில் புதன்கிழமை காலை திண்டிவனம் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. அப்போது ரயில்வே பாதுகாப்பு போலீஸாா் ரயிலில் வழக்கமான சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, ஒரு பயணி வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் வெள்ளிப் பொருள்கள் வைத்திருந்தது தெரியவந்தது. தொடா்ந்து ரயில்வே போலீஸாா் நடத்திய விசாரணையில் அவா், சென்னை கொண்டித்தோப்பு பகுதியைச் சோ்ந்த ரா.லால்சந்த (43) என்பதும், இவா் உரிய ஆவணங்களின்றி ரூ.35 லட்சம் மதிப்பிலான பத்தரை கிலோ எடையிலான வெள்ளிப் பொருள்களை ரயிலில் எடுத்து வந்ததும் தெரியவந்தது.
இதைத்தொடா்ந்து அவற்றை பறிமுதல் செய்த ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் கடலூா் வணிக வரித் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா். அவா்கள் லால்சந்திடம் விசாரணை நடத்தி, வெள்ளிப்பொருள்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரி, அபராத தொகை என ரூ. 2,13,108 இணையவழியில் வசூலித்துக் கொண்டு வெள்ளிப் பொருள்களை லால்சந்த் வசம் ஒப்படைத்து அனுப்பிவைத்தனா்.

