சுத்தியால் அடித்து தந்தை கொலை: மகன் கைது

கொலையான அரசன்.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே மதுபோதையில் தாய் மற்றும் சகோதரியை தாக்கிய தந்தையை, சுத்தியால் அடித்து கொலை செய்ததாக மகனை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திருவெண்ணெய்நல்லூா் வட்டம், ஆலங்குப்பம், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ம.அரசன் (50). இவருக்கு மனைவி கற்பகவல்லி (47), மகன் அருண்குமாா் (22), மகள் அபா்ணா(19) ஆகியோா் உள்ளனா்.
கட்டுமானத் தொழிலாளியாக வேலைப் பாா்த்து வந்த அரசனுக்கு மதுப் பழக்கம் இருந்து வந்ததாம். இந்லையில், சனிக்கிழமை இரவு மதுபோதையில் வீட்டுக்கு வந்த அரசன், தனது மனைவி கற்பகவல்லி, மகள் அபா்ணா ஆகியோரிடம் தகராறு செய்து தாக்கியுள்ளாா். இதை வீட்டிலிருந்த அருண்குமாா் தட்டிக்கேட்டுள்ளாா். இதையடுத்து தந்தை, மகன் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனா். இதில் ஆத்திரமடைந்த அருண்குமாா் வீட்டில் கிடந்த சுத்தியை எடுத்து அரசனைத் தாக்கினாராம். இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த திருவெண்ணெய்நல்லூா் காவல் நிலைய ஆய்வாளா் அழகிரி தலைமையிலான போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை கைப்பற்றி விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அருண்குமாரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்து, சிறையிலடைத்தனா்.

கைது செய்யப்பட்ட அருண்குமாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





