புதுச்சேரிக்கு சிறப்பு மாநில அந்தஸ்து: காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் உறுதி
புதுச்சேரிக்கு நிதி உதவியுடன் கூடிய சிறப்பு மாநில அந்தஸ்து பெற நடவடிக்கை எடுக்கப்படும் என காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் உறுதி கூறப்பட்டுள்ளது.


புதுச்சேரிக்கு நிதி உதவியுடன் கூடிய சிறப்பு மாநில அந்தஸ்து பெற நடவடிக்கை எடுக்கப்படும் என காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் உறுதி கூறப்பட்டுள்ளது.
சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 21 தொகுதிகளிலும், திமுக 9 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழா புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை தனியார் ஓட்டலில் நடந்தது. மாநில தலைவர் ஏ.நமச்சிவாயம் தேர்தல் அறிக்கையை வெளியிட தேசிய பொதுச் செயலாளர் வி.நாராயணசாமி பெற்றுக் கொண்டார்.
தேர்தல் அறிக்கையின் சிறப்பு அம்சங்கள்:
புதுச்சேரிக்கு நிதி உதவியுடன் கூடிய சிறப்பு மாநில அந்தஸ்து பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
கல்வி:
அனைத்து மாணவர்களுக்கும் கல்வி கட்டாயம் ஆக்கப்படும். அனைத்து பள்ளிகளும் நவீனப்படுத்தப்பட்டு நவீன கல்வி போதித்தல் மூலம் மேம்படுத்தப்படும்.
அனைத்துக் கல்லூரிகளிலும் பிரெஞ்சு, ஸ்பானிஷ், ஜெர்மன், அரபிக் போன்ற அயல்நாட்டு மொழிகள் கற்பிக்கப்படும்.
சென்டாக் மூலம் மருத்துவ, பொறியியல் கல்லூரிகளில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும். இந்திரா காந்தி அரசு மருத்துவக்கல்லூரியில் முதுகலை பட்ட மேற்படிப்பு வகுப்புகள் தொடங்கப்படும்.
தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணம் முறைப்படுத்தப்படும். சென்டாக்கில் அரசு பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை தரப்படும். ஏழை மாணவர்களுக்கு கல்விக் கடன் ரத்து செய்யப்படும்.
சுகாதாரம்:
புதுச்சேரி அரசு பொது மருத்துவமனை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக உயர்த்தப்படும். மருந்துகள் உற்பத்திக்காக தனி மண்டலம் உருவாக்கப்படும். நவீன தொழில்நுட்ப முறையில் உயர்த்தர மருத்துவ வசதி இலவசமாக கிடைக்க விரைவான நடவடிக்கை எடுக்கப்படும்.
அனைவருக்கும் ஆயுள் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும். என்ஆர்எச்எம் ஊழியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவர். மருந்துகள் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
விவசாயம்:
விவசாயிகளுக்கு பயிர் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படும். வட்டியில்லா கடன் விரைவாக வழங்க நடவடிக்கை, விவசாய கடனை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். கிராமங்களில் கால்நடை, விவசாயத்துறை அலுவலகங்கள் ஏற்படுத்தப்படும். விவசாய வாரியம் உருவாக்கப்படும். இயற்கை விவசாயத்தை மேம்படுத்த இயற்கை விவசாயவிதைப் பண்ணை அமைக்கப்படும். பால் கொள்முதல் விலை உயர்த்தப்படும். 100 சதவீதம் மானியத்தில் கால்நடை தீவனம் தரப்படும்.
குடிமைப் பொருள் வழங்கல்துறை:
வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளோர் நடுத்தர குடும்பத்தினர், உயர்தர குடும்பத்தினர்
என 3 வகைகளாக ரேஷன் அட்டைகள் தரம் பிரிக்கப்பட்டு, நலத்திட்டங்கள் வழங்கப்படும்.
30 கிலோ இலவச வெள்ளை அரிசி, 5 கிலோ இலவச கோதுமை தரப்படும். அத்தியாவசிய மளிகை பொருள்கள் ரேஷன் கடைகளில் வழங்கப்படும். போலி உணவு அட்டைகள் ரத்து செய்யப்படும்.
வேலைவாய்ப்பு
வீட்டுக்கு ஒருவருக்கு வேலைவாய்ப்பு வழங்க தனி சட்டம் இயற்றப்படும். வேலைவாய்ப்பை உருவாக்க தனியார் பங்களிப்புடன் புதிய தொழிற்சாலை உருவாக்கப்படும்.
50 ஏக்கர் பரப்பில் முதல் தகவல் தொழில்நுட்பப் பூங்கா ஏற்படுத்தப்படும். 5 ஆண்டுகளில் அரசு மற்றும் தனியார் மூலம் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். 100 நாள்கள் வேலை திட்டம், இனிமேல் 150 நாள்களாக உயர்த்தப்படும்.
மகளிர்: தாலிக்கு தங்கம்
வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள பெண்களுக்கு திருமணத்தின் போது தாலிக்கு தங்கம் வழங்கப்படும். 1 லட்சம் மகளிருக்கு தொகுதிக்கு 3000 பேர் வீதம் ரூ.5000 வட்டியில்லாக் கடன் தரப்படும்.
காவலர்:
காவலர்கள் பஞ்சப்படி உயர்த்தப்படும். முழுவதுமாக காவல்துறை நவீனப்படுத்தப்படும். காவல்துறை கோரிக்கைகளை நிறைவேற்ற ஒரு நபர் குழு அமைக்கப்படும். குண்டர் தடுப்புó சட்டம் தீவிரமாக அமுல்படுத்தப்படும்.
அரசு ஊழியர்கள்:
மத்திய அரசால் தரப்படும் அனைத்து சலுகைகளும், புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு பெறப்படும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு கோரிக்கைகளை நிறைவேற்ற ஒரு நபர் குழு
அமைக்கப்படும். ஒற்றைமுறை ஓய்வூதியத் திட்டம் அமுல்படுத்தப்படும். ரொட்டிப்பால் ஊழியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவர். காலி அரசுப்பணியிடங்கள் நிரப்பப்படும்.
முதியோர்-தியாகிகள்:
முதியோர் உதவித் தொகை ரூ.3 ஆயிரமாகவும், 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு ரூ.5 ஆயிரமாகவும் தரப்படும். மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகையும் ரூ.3 ஆயிரமாகவும், தியாகிகள் ஓய்வூதியம் ரூ.10 ஆயிரமாகவும் உயர்த்தப்படும்.
விளையாட்டுத்துறை:
விளையாட்டு வீரர்கள் நலனுக்காக விளையாட்டு நலவாரியம் ஏற்படுத்தப்படும். சர்வதேச, தேசிய போட்டிகளில் வென்றவர்களுக்கு ஊக்கத்தொகை துரிதமாக வழங்கப்படும்.
நாட்டுப்புற கலையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும். தீபாவளி, பொங்கல் பண்டிகைகளில் மளிகை பொருள்கள், பண்டிகை பொருள்கள் அடங்கிய இலவச பை வழங்கப்படும்.
மின்கட்டணம் பாதியாக குறைப்பு:
மின்சாரக் கட்டணம் 50 சதவீதமாக குறைக்கப்படும். பயன்படுத்தும் மின்சாரத்துக்கான கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும். தடையில்லாத மின்சாரம் கிடைக்க நடவடிக்கை, மின் திருட்டுக்கள் முழுமையாக தடுக்கப்படும்.
குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க மெகா திட்டம் செயல்படுத்தப்படும். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இலவசமாக அனைத்துப்பகுதிகளுக்கும் தரப்படும்.
நகரப்பகுதிகளில் மலிவுவிலையில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் திட்டம் செயல்படுத்தப்படும். வீடு கட்ட வாங்கிய கடன்களுக்கு வட்டி, அபராத வட்டி தள்ளுபடி செய்யப்படும்.
தொழிற்சாலைகள்
செயல்படாமல் இருக்கும் தொழிற்சாலைகளை உடனே திறக்கவும், புதிய ஆலைகளை தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்றுமதியை ஊக்குவிக்க புதிய முனையம் உருவாக்க்படும். மின்னணு தொழிற் சந்தை ஏற்படுத்தப்படும். புதிய தொழிற்கொள்கை உருவாக்கப்படும்.
போக்குவரத்து:
போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த புதிய திட்டம் தொடங்கப்படும். இந்திரா காந்தி,
ராஜிவ் காந்தி சிலைக பகுதிகளில் மேம்பாலங்கள் கட்டப்படும். மினி பஸ் திóட்டம் செயல்படுத்தப்படும்.
உள்ளாட்சித் தேர்தல்:
புதுச்சேரியில் மீண்டும் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும். பெண்களுக்கு 50 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்படும். புதுச்சேரி நகராட்சி, உழவர்கரை நகராட்சியை பொலிவுறு நகர திட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
வணிகர்கள் அச்சமின்றி தொழில்புரிய நடவடிக்கை எடுக்கப்படும். அமைப்புசாரா தொழிலாளர்கள் நலச்சங்கம், நலவாரியமாக மாற்றப்படும். ஆட்டோ, மினிவேன் டிரைவர்களுக்கு நலவாரியம் உருவாக்கப்படும்.
விடுபட்ட மீனவர்களுக்கு சுனாமி வீடுகள் கட்டப்படும். நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் மீனவர்களுக்கான உதவித்தொகை ரூ.4000-ஆக உயர்த்தப்படும். தேங்காய்த்திட்டு துறைமுகத்தில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்படும்.
இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீட்டு 4 சதவீதமாக உயர்த்தப்படும்.
பஞ்சாலைகள் சீரமைப்பு:
ஏஎப்டி, பாரதி, சுதேசி, ஸ்பின்கோ பஞ்சாலைகளை சீரமைத்து வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். ஆதிதிராவிடர்களுக்கான சிற்பபு கூறு நிதி முழுமையாக செலவிடப்படும்.
இலவச செட்டாப் பாக்ஸ்
பொதுமக்களுக்கு இலவச செட்டாப்பாக்ஸ் வழங்கப்படும். ஓரே மாதிரியான கேபிள் டிவி கட்டணம் வசூலிக்கப்படும். பசுமையான புதுச்சேரி உருவாக்கப்படும். சுற்றுலாத்துறை உள்கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலை புனரமைக்கப்படும்.
காரைக்கால் மாவட்ட வளர்ச்சிக்காக சிறப்பு நிதி ஒதுக்கப்படும். காவிரி நீர் கிடைக்கச் செய்யப்படும். மாஹே, ஏனாம் பகுதிகளில் வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...