கர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைது
கர்நாடகத்தில் பிராமண சமுதாய மாணவர்கள் அணிந்திருந்த பூணூலை கழற்ற உத்தரவிட்ட...
பெங்களூரு: கர்நாடகத்தில் பொது நுழைவுத் தேர்வின்போது பிராமண சமுதாய மாணவர்கள் அணிந்திருந்த பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்னர் என்று பெங்களூரு நகர்ப்புற மாவட்ட ஆட்சியர் ஜி.ஜெகதீஷா தெரிவித்தார்.
இதுகுறித்து பெங்களூரில் செய்தியாளர்களிடம் அவர் திங்கள்கிழமை கூறியதாவது:
பெங்களூரில் கடந்தவாரம் தொழிற்கல்விக்கான பொது நுழைவுத் தேர்வு நடைபெற்றபோது பிராமண மாணவர்கள் பூணூலை அகற்றுமாறு தேர்வு மைய அதிகாரிகள் உத்தரவிட்டிருந்ததாக புகார் எழுந்தது. இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க மூத்த அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அக்குழுவினர் விசாரணை நடத்தி அளித்துள்ள அறிக்கையில், உள்நோக்கத்தோடுதான் மாணவர்களின் பூணூல் அகற்ற உத்தரவிடப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.
Advertisement
இதுதொடர்பாக பெங்களூரில் உள்ள தனியார் கல்லூரியின் கல்வி அதிகாரிகள் 3 பேர் மீது போலீஸôர் ஏற்கெனவே வழக்குப் பதிவு செய்துள்ளனர். கடந்த ஆண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்ததால், இதுகுறித்து அக்கறை எடுத்து கர்நாடகத் தேர்வு ஆணையம் பயிற்சி அளிக்கிறது.
அந்தப் பயிற்சியில் எதை செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்பது விளக்கப்படுகிறது.
அதன்பிறகும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவதை தடுப்பதற்காக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, 3 அதிகாரிகள் மீது வழக்குப் பதிவுசெய்து கைது செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட அளவில் அளிக்கப்பட்டுள்ள விசாரணை அறிக்கை, மாநில அரசின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்படும். அதன்படி, சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகள்மீது அரசு கடும் நடவடிக்கை எடுத்துள்ளது.
இச்சம்பவம் நடந்த தனியார் கல்வி நிறுவனத்தில் அடுத்த ஆண்டு முதல் பொது நுழைவுத் தேர்வை நடத்த கர்நாடகத் தேர்வு ஆணையம் அனுமதி அளிக்கக்கூடாது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.