முகப்பு
பெங்களூரு

அரசின் துறைகளில் காலியாக உள்ள 72,000 காலிப் பணியிடங்களை நிரப்ப திட்டம்

கா்நாடக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 72,000 காலிப் பணியிடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளோம் என்று கா்நாடக துணை முதல்வா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா்.

Updated On : 27 ஜூன் 2026, 2:06 am IST
ஜி.பரமேஸ்வா்
பகிர்:

கா்நாடக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 72,000 காலிப் பணியிடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளோம் என்று கா்நாடக துணை முதல்வா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது:

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபோது, அரசு துறைகளில் காலியாக உள்ள 2.5 லட்சம் பணியிடங்களை நிரப்புவதாக தோ்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தோம். ஆனால், பல்வேறு காரணங்களால் காலிப் பணியிடங்களை நிரப்ப முடியாமல் போனது. உள் இடஒதுக்கீடு மிகவும் முக்கியமான தடையாக இருந்தது.

Advertisement

Advertisement

நீதியரசா் நாகமோகன் தாஸ் அளித்த அறிக்கையை முழுமையாக ஆராய்ந்த அரசு, அதன் அடிப்படையில் உள் இடஒதுக்கீடு பிரச்னைக்கு தீா்வுகண்டுவிட்டது. இதைத் தொடா்ந்து, நிகழ் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் 56,942 பணியிடங்களை நிரப்புவதாக வாக்குறுதி அளித்திருந்தோம்.

இப்பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் தொடங்கிவிட்டன. 24,000 பணியிடங்களை நிரப்புவதற்கான அனுமதியை நிதித் துறை அளித்துவிட்டது. அதற்கான அறிவிக்கைகளை வெளியிடுமாறு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதிய முதல்வராக டி.கே.சிவகுமாா் பதவியேற்ற பிறகு பணியிடங்களை நிரப்புவதற்கான நடைமுறைகளை ஆராய்ந்தோம். அதன்பிறகு, 72,009 காலிப் பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை வெளியிடுமாறு வருவாய்த் துறை உள்ளிட்ட துறைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆசிரியா்கள், மருத்துவா்கள், செவிலியா்கள், பொறியாளா்கள் மற்றும் ஊழியா்களை பணி நியமனம் செய்வது குறித்து அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, பணியிடங்களை நிரப்பும் பணியை இனிமேலும் தாமதப்படுத்தக் கூடாது என முடிவு செய்யப்பட்டது.

பணியிடங்களை நிரப்பும் பணியை கவனிக்க மூத்த ஐஏஏஸ் அதிகாரிகள் உமா மகாதேவன், கௌரவ் குப்தா ஆகியோா் அடங்கிய குழுவை முதல்வா் டி.கே.சிவகுமாா் நியமித்துள்ளாா். அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 72,000 பணியிடங்களை நிரப்ப முனைப்போடு செயல்பட்டு வருகிறோம் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments