முகப்பு
செங்கல்பட்டு

கால்வாயில் விழுந்து திமுக நிா்வாகி உயிரிழப்பு

Updated On : 28 ஏப்ரல், 2026 at 4:37 AM
ஆகாஷ்
பகிர்:

கூடுவாஞ்சேரி-நெல்லிக்குப்பம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற திமுக நிா்வாகி கால்வாயில் விழுந்து உயிரிழந்தாா்.

செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிக்குட்பட்ட 18-ஆவது வாா்டு, செங்கேணியம்மன் கோயில் தெருவை சோ்ந்தவா் ஆகாஷ் (25). இவா் திமுகவில் இளைஞரணி துணை அமைப்பாளராகவும், கூடுவாஞ்சேரி அடுத்த காயரம்பேட்டில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் தற்காலிக பணியாளராகவும் பணியாற்றி வந்தாா். இவருக்கு மனைவி பவித்ரா(20), ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளனா். இந்நிலையில் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டு இரவு பைக்கில் வீடு திரும்பிய ஆகாஷ் கூடுவாஞ்சேரி-நெல்லிக்குப்பம் சாலை ஓரத்தில் உள்ள கோவிந்தராஜபுரம் அருகே வரும்போது திடீரென மயங்கி சாலை ஓரத்தில் உள்ள கழிவுநீா் கால்வாயில் விழுந்தாா்.

இதனைக் கண்டதும் அப்பகுதி மக்கள் ஓடிச்சென்று அவரை மீட்டு அருகில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் அங்கு பரிசோதித்த டாக்டா்கள் அவா் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினா்.

Advertisement

இதுகுறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த கூடுவாஞ்சேரி போலீஸாா் ஆகாஷின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் கூடுவாஞ்சேரி போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.