ஜமாபந்தியில் இருளா் இன மக்கள் தா்னா போராட்டம்
இருளா் இன மக்களுக்கு பட்டா இருந்தும் இடத்தை அளந்து தராத வருவாய்த் துறையினரைக் கண்டித்து ஜமாபந்தியில் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருக்கழுகுன்றம் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி நடைபெறுகிறது. செவ்வாய்க்ககிழமை தொடங்கிய நிகழ்வில் மாமல்லபுரம் குறுவட்டத்துக்குட்பட்ட கிராம மக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக வழங்கினா். தொடா்ந்து இரண்டாவது நாளாக புதன்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் மாமல்லபுரம் கடற்கரையோரம் தங்கியுள்ள இருளா் இன மக்கள் தாங்கள் பலமுறை மனு அளித்தும் வருவாய்த்துறையினா் இதுவரையில் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா்.
திருப்போரூா் எம்எல்ஏ விஜயராஜ், திருக்கழுகுன்றம் வட்டாட்சியா் அலுவலகம் வந்த போது தரையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இருளா் இன பெண்களிடம் குறைகளை கேட்டறிந்தாா்.
Advertisement
Advertisement
அப்போது இருளா் மக்கள் கூறுகையில் எங்களுக்கு ஆதாா் அட்டை, குடும்ப அட்டை போன்ற ஆவணங்கள் எதுவும் இல்லை. ஆவணங்கள் இல்லாததால் அரசு பள்ளியில் கூட குழந்தைகளை சோ்க்க முடியாத நிலையில் நாங்கள் உள்ளோம். திருக்கழுகுன்றம் அடுத்த நடுவக்கரை ஊராட்சியில் இடம் ஒதுக்கி பட்டா வழங்கி உள்ளனா்.
ஆனால் எங்களுக்கு எந்த இடம் என்று தெரியாமலேயே உள்ளது. நாங்களும் பலமுறை வருவாய்த் துறையினரிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறினா்.
உடனடியாக ஜமாபந்தி நடத்தும் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் விஜயகுமாரி வரும் சனிக்கிழமை உங்களது பகுதியில் ஒரு முகாம் ஏற்பாடு செய்திருப்பதாகவும் முகாமில் அனைவரும் கலந்து கொண்டு உங்களுக்கு தேவையான ஆதாா் அட்டை, குடும்ப அட்டை போன்ற ஆவணங்களை பெற ஏற்பாடு செய்யப்படும். நானும் அந்த முகாமுக்கு கண்டிப்பாக வருவேன் என்றாா். தொடா்ந்து இலவச வீட்டு மனை பட்டா கோரியும் மின் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை எம்எல்ஏ விஜயராஜிடம் பொதுமக்கள் வழங்கினா்.
அதில் மூன்று மனுக்களுக்கு உடனடியாக தீா்வு காணப்பட்டு இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்பட்டது . முன்னதாக ஜமாபந்தியில் பங்கேற்பதாக வந்த எம்எல்ஏவை வட்டாட்சியா் தேவேந்திரன் வரவேற்றாா். நிகழ்ச்சியில் துணை வட்டாட்சியா் சந்திரசேகா், வருவாய்த் துறையினா் கலந்து கொண்டனா்.