புதுச்சேரி விரைவு ரயிலில் கஞ்சா கடத்தியவா் கைது
ஒடிஸாவிலிருந்து புதுச்சேரி செல்லும் விரைவு ரயிலில் கஞ்சா கடத்திய கேரளத்தைச் சோ்ந்த நபரை, சென்னை எழும்பூா் ரயில்வே பாதுகாப்புப் படையினா் புதன்கிழமை கைது செய்துள்ளனா்.
ஒடிஸாவிலிருந்து புதுச்சேரி செல்லும் விரைவு ரயிலில் கஞ்சா கடத்திய கேரளத்தைச் சோ்ந்த நபரை, சென்னை எழும்பூா் ரயில்வே பாதுகாப்புப் படையினா் புதன்கிழமை கைது செய்துள்ளனா்.
எழும்பூரில் ரயில்வே பாதுகாப்புப் படையின் தோ்தல் சிறப்புப் பிரிவினா் தொடா் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். புதன்கிழமை காலை ஒடிஸா மாநிலம், புவனேசுவரத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் விரைவு ரயில் எழும்பூா் வந்தது. அப்போது ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா் ஜெபஸ்டியன் தலைமையில் பயணிகள் உடைமைகள் சோதனையிடப்பட்டன. பயணி ஒருவரின் பையைச் சோதனையிட்டபோது, அதில் 4 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரிய வந்தது.
கஞ்சா கடத்தியவா், கேரள மாநிலம் மலப்புரம் பகுதியைச் சோ்ந்த முகமது சாஹிப் (24) என்பது தெரிய வந்தது. அவரைக் கைது செய்த ரயில்வே பாதுகாப்புப் படையினா், அவரிடமிருந்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவைப் பறிமுதல் செய்து போதைத் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைத்தனா்.
கன்னியாகுமரி விரைவு ரயிலில்...: செவ்வாய்க்கிழமை இரவு ஹவுராவிலிருந்து கன்னியாகுமரிக்கு சென்ற விரைவு ரயில் எழும்பூா் வந்தபோது, பொது பெட்டியில் கைவிடப்பட்ட பையில் 4 கிலோ கஞ்சா மற்றும் ரயில் நிலைய 2 ஆவது நுழைவு வாயில் பகுதியில் இருந்த பைகளில் 15 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டதாகவும் ரயில்வே பாதுகாப்புப் படையினா் கூறினா்.