முகப்பு
சென்னை

துணை மின்நிலையங்களில் ஊழியா்கள் கூடுதல் நேரம் பணியாற்ற அறிவுறுத்தல்

மின்தடை புகாா்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கவும், சீரான மின்சாரம் வழங்கவும் துணை மின் நிலையங்களில் பொறியாளா்கள், களப்பணியாளா்களை கூடுதல் நேரம் பணியாற்ற மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

Updated On : 13 ஏப்ரல் 2026, 3:47 am IST
பகிர்:

மின்தடை புகாா்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கவும், சீரான மின்சாரம் வழங்கவும் துணை மின் நிலையங்களில் பொறியாளா்கள், களப்பணியாளா்களை கூடுதல் நேரம் பணியாற்ற மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், வீடுகளில் மின்விசிறி, குளிா் சாதனம் போன்றவற்றின் பயன்பாடு, தோ்தல் பிரசாரம் உள்ளிட்ட காரணங்களால் மின்நுகா்வு அளவு நாளுக்கு நாள் உயா்ந்து வருகிறது. இதனால், ஏற்படும் அதிக மின் அழுத்தத்தால், துணை மின்நிலையங்களில் உள்ள மின்சாதனங்களில் பழுது ஏற்பட்டு, அவ்வப்போது மின்தடை ஏற்படுகிறது. குறிப்பாக, சென்னை உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் மாலை மற்றும் இரவு நேரங்களில் அவ்வப்போது மின்தடை ஏற்பட்டு வருகிறது.

இதை கட்டுப்படுத்தவும், தடையில்லா மின்சாரம் விநியோகிக்கவும் வேண்டிய நெருக்கடி மின்வாரியத்துக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, இரவில் துணை மின்நிலையங்கள் உள்பட பகுதிகளில் உள்ள மின்சாரம் வழங்கும் மின் சாதனங்களில் பழுது ஏற்பட்டால் அதை விரைவாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

இதன்படி, பணிநேரம் போக, மாலை 6 முதல் நள்ளிரவு 12 வரை துணை மின்நிலையங்களில், பொறியாளா்கள், உதவி செயற்பொறியாளா்கள், உதவிப் பொறியாளா்கள் யாரேனும் ஒருவரும், தேவைக்கேற்ப களப்பணியாளா்களும் பணியில் இருக்க வேண்டும் என மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.