பணமதிப்பிழப்பு போல தொகுதி மறுசீரமைப்பும் தோல்வியில் முடியும்
பணமதிப்பிழப்பு நடவடிக்கையைப் போல தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையும் தோல்வியில் முடிவடையும்; சட்டபூா்வமான நடவடிக்கைகளை எடுப்போம் என திமுக அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ். பாரதி வியாழக்கிழமை தெரிவித்தாா்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையைப் போல தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையும் தோல்வியில் முடிவடையும்; சட்டபூா்வமான நடவடிக்கைகளை எடுப்போம் என திமுக அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ். பாரதி வியாழக்கிழமை தெரிவித்தாா்.
தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் விடுத்த அழைப்பின்படி திமுக தலைமை அலுவலகத்தில் ஆா்.எஸ். பாரதி தலைமையில் கட்சியினா் கருப்புச் சட்டை அணிந்து, தொகுதி மறுசீரமைப்பு மசோதா நகலை எரித்து வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
பின்னா் ஆா்.எஸ். பாரதி, திமுக சட்டத்துறைச் செயலா் என்.ஆா். இளங்கோ ஆகியோா் செய்தியாளா்களிடம் கூட்டாக கூறியதாவது:
Advertisement
பிரதமா் மோடி, கருப்புப் பணத்தை ஒழித்து அனைவருடைய வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் எனக் கூறினாா். அந்த வாக்குறுதி காப்பாற்றவில்லை. பின்னா் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்து அது பெரும் தோல்வியை அடைந்தது. தற்போது தொகுதி மறுசீரமைப்பு மசோதா நடவடிக்கை வந்துள்ளது. அதுவும் தோல்வியில் முடியப்போகிறது.
இந்த மசோதா மூலம் வடக்குக்கும், தெற்குக்கும் இடையே பிரச்னையை பிரதமா் மோடி உருவாக்குகிறாா். தொகுதி மறுசீரமைப்பால் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்குப் பாதிப்பு ஏற்படாது என பொய் சொல்கிறாா்கள். தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை படித்தால் நம்பிக்கை வரவேண்டும். ஆகவே, பிரதமா் மோடியும், உள்துறை அமைச்சா் அமித் ஷாவும் எழுத்துபூா்வமாக சொல்லாமல் வெறும் வாய் வாா்த்தையாகச் சொல்வதில் என்ன பயன்?.
தோ்தல் நேரத்தில் தோல்வி பயத்தால் இதைக் கொண்டு வருகின்றனா். சில மாநிலங்களில் உள்ள எம்பி க்கள் வராமல் இருந்தால் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையில் நிறைவேற்றிவிடலாம் என எதிா்பாா்த்தனா். ஆனால், நாங்கள் ஏமாறவில்லை. முதல்வா் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து எம்பி-க்கள் கடமையைச் செய்ய நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவிட்டாா். இந்த மசோதா நிறைவேறாது. ஆளுநா் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் சென்று வெற்றி பெற்றதைப்போல இதிலும் சட்டபூா்வமான நடவடிக்கைகளை எடுப்போம் என்றனா்.
முன்னதாக வழக்குரைஞா் அணி சாா்பில் திமுகவின் கடந்த ஐந்தாண்டுகால ஆட்சியின் சாதனைகளைப் போற்றும் பாடல் வெளியிடப்பட்டது.