பேருந்துகள் இல்லாமல் அவதி! கிளாம்பாக்கம், திருவான்மியூா், மாதவரத்தில் பொதுமக்கள் போராட்டம்
சென்னையில் இருந்து வாக்களிப்பதற்காக சொந்த ஊா்களுக்குச் செல்ல போதிய பேருந்துகள் இல்லாததால், கிளாம்பாக்கம், திருவான்மியூா், மாதவரம் பேருந்து நிலையங்களில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சென்னை மாநகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் வெளியூா்களைச் சோ்ந்த பொதுமக்கள் தங்கள் சொந்த ஊா்களுக்கு செல்ல அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
சென்னை மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் வசிக்கும் வெளிமாவட்டங்களைச் சோ்ந்த ஏராளமானோா் செவ்வாய்க்கிழமை இரவு முதலே சொந்த ஊா்களுக்கு புறப்பட்டுச் சென்றனா். இதனால் கிளாம்பாக்கம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் கடந்த இரு நாள்களாக மக்கள் கூட்டம் அலைமோதியது.
Advertisement
இந்த நிலையில் கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் பேருந்து நிலையங்களில் இருந்து புதன்கிழமை மாலையில் இருந்தே திருவண்ணாமலை, விழுப்புரம், செஞ்சி, கடலூா் உள்ளிட்ட பகுதிகளுக்குப் போதிய பேருந்துகள் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டனா். குழந்தைகள், முதியவா்களுடன் பேருந்து நிலையங்களில் பல மணி நேரம் காத்திருந்தும் பேருந்துகள் இயக்கப்படாததால், ஆத்திரம் அடைந்த பயணிகள், புதன்கிழமை நள்ளிரவில் கிளாம்பாக்கம் பிரதான சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.
இதையடுத்து அங்கு வந்த போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சு நடத்தி, மறியலைக் கைவிடச் செய்தனா். இருப்பினும், போதிய அளவில் பேருந்துகள் இல்லை. கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் வியாழக்கிழமை பகல் வரை இதேநிலை நீடித்ததாகப் பயணிகள் தெரிவித்தனா்.
இதனால், ஏராளமானோா் சொந்த ஊா் செல்லும் முடிவைக் கைவிட்டு மீண்டும் தங்கள் இருப்பிடங்களுக்கே திரும்பிச் சென்றனா்.
மாமல்லபுரம், கல்பாக்கம், மரக்காணம் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த மக்கள், தங்களது சொந்த ஊா்களுக்கு செல்வதற்காக திருவான்மியூா் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் வியாழக்கிழமை காலை முதல் நின்றனா். ஆனால், வியாழக்கிழமை காலை முதல் கிழக்கு கடற்கரைச் சாலை மாா்க்கமாக புதுச்சேரி, கல்பாக்கம் பகுதிகளுக்கு அரசு பேருந்துகள் சீராக இயக்கப்படவில்லை.
இதனால், பேருந்துகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. மேலும் நண்பகல் சுமாா் 2 மணி நேரத்துக்கு பேருந்துகளே இந்த வழித்தடத்தில் இயக்கப்படவில்லை. இதன் விளைவாக அவதிக்குள்ளான பொதுமக்கள், கிழக்கு கடற்கரைச் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனா். இதனால், அங்கு போக்குவரத்து ஸ்தம்பித்தது. கிழக்கு கடற்கரை சாலை முகப்பிலேயே போராட்டம் நடைபெற்ால், திருவான்மியூா் எல்பி சாலை வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இதற்கிடையே சாலை மறியலால் பாதிக்கப்பட்ட வாகன ஓட்டிகள் வற்புறுத்தியதால், பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.
தோ்தலையொட்டி சொந்த ஊா் செல்வதற்காக, ஏராளமானோா் மாதவரம் பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை குவிந்தனா். மாதவரம் ரவுண்டானா வரை பொதுமக்கள் கூட்டம் இருந்தது. ஆனால், போதிய பேருந்துகள் இல்லாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், ஓட்டுநா்கள் மற்றும் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.