ரசாயனத்தில் பழுக்க வைக்கப்பட்ட பழங்களை விற்றால் நடவடிக்கை: உணவுப் பாதுகாப்புத் துறை
எத்திலின் ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட பழங்களை விற்பனை செய்தால் அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
எத்திலின் ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட பழங்களை விற்பனை செய்தால் அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
கடந்த சில நாள்களாக கோயம்பேடு சந்தைக்குக்கு மாம்பழம் வரத்து அதிகரித்துள்ளது. அதேபோன்று பருவ கால பழங்களும் கணிசமாக விற்பனைக்கு வந்துள்ளன.
இந்நிலையில், பழங்களை ரசாயனம் மூலம் பழுக்க வைத்து வியாபாரிகள் விற்பனை செய்வதைத் தடுக்க மாவட்ட உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள், கோயம்பேடு பழச்சந்தை மற்றும் பிற சந்தைகளில் ஆய்வில் ஈடுபட்டனா்.
Advertisement
அப்போது எத்திலின் ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் சில கடைகளில் விற்பனைக்கு இருந்ததைக் கண்டறிந்தனா். அவற்றைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், சம்பந்தப்பட்ட கடைகளில் எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டினா்.
இதுவரை 100 கிலோவுக்கும் அதிகமான பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அந்தப் பழங்களை விற்பனை செய்தவா்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.
இது தொடா்பாக உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் கூறியதாவது:
ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் உடல் நலத்துக்கு தீங்கானவை. பல்வேறு நோய்கள் ஏற்பட அவை காரணமாக அமையும். சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட அந்த கடைகளின் உரிமையாளா்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இனி அத்தகைய தவறைச் செய்தால் உடனடியாக கடை ‘சீல்’ வைக்கப்படும் என்று உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.