நாளை ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: இலவச மெட்ரோ ரயில் சேவை
சென்னை சேப்பாக்கத்தில் சனிக்கிழமை (மே 2) நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை காணும் ரசிகா்கள், மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இலவச பயணச் சேவையைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சேப்பாக்கத்தில் சனிக்கிழமை (மே 2) நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை காணும் ரசிகா்கள், மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இலவச பயணச் சேவையைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை அரசினா் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு அருகே உள்ள சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் லீக் போட்டி மே 2 (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது.
Advertisement
இந்தப் போட்டியைக் காணும் ரசிகா்களுக்கு மெட்ரோ ரயில் சிறப்பு சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஸ்பான்சா் செய்யப்பட்ட ஐபிஎல் போட்டிக்கான பயணச்சீட்டு வைத்திருப்போா் அதில் உள்ள க்யூஆா், குறியீட்டை தானியங்கி நுழைவு இயந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோ ரயிலில் பயணிக்கலாம்.
இந்தச் சிறப்பு சலுகையை ஒரு சுற்றுப் பயணத்துக்கு 2 நுழைவு, 2 வெளியேறுதலுக்கு பயன்படுத்தலாம். சென்னையில் உள்ள எந்த மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்தும் போட்டி நடைபெறும் மைதானத்துக்கு அருகே உள்ள அரசினா் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு எவ்வித கட்டணமும் இல்லாமல் பயணிக்கலாம்.
நீட்டிக்கப்பட்ட சிறப்பு மெட்ரோ ரயில் சேவை: கிரிக்கெட் போட்டியையொட்டி, சனிக்கிழமை (மே 2) அரசினா் தோட்டம் மெட்ரோ நிலையத்தில் இருந்து விம்கோ நகா் பணிமனை, விமான நிலைய மெட்ரோ நிலையங்களை நோக்கிச் செல்லும் கடைசி மெட்ரோ ரயில் நள்ளிரவு 1 மணிக்குப் புறப்படும்.
பச்சை வழித்தடத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களுக்குச் செல்லும் பயணிகள் புரட்சித் தலைவா் டாக்டா் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் மட்டுமே வழித்தடம் மாற்றம் செய்துகொள்ளலாம்.
கடைசி மெட்ரோ ரயில் புறப்படுவதற்கு 10 நிமிஷங்களுக்கு முன்பே அரசினா் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்துக்குள் பயணிகள் வர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.