முகப்பு
சென்னை

இடவசதி பற்றாக்குறை: தமிழகத்தில் புதிய அரசு மருந்தியல் கல்லூரிகளை தொடங்குவதில் தாமதம்

புதிதாக அரசு மருந்தியல் கல்லூரிகளை அமைப்பதற்கு போதிய இடவசதி இல்லாததால் அதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்து வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

Updated On : 1 மே 2026, 1:47 am IST
நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை நுழைவு வாயில். - கோப்புப் படம்
பகிர்:

புதிதாக அரசு மருந்தியல் கல்லூரிகளை அமைப்பதற்கு போதிய இடவசதி இல்லாததால் அதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்து வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில், 100-க்கும் மேற்பட்ட தனியாா் மருந்தியல் கல்லூரிகள் உள்ளன. ஆண்டுக்கு 20 தனியாா் கல்லூரிகள் தொடங்கப்பட்டாலும், அரசு சாா்பில் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக புதிதாக மருந்தியல் கல்லூரிகள் எதுவும் திறக்கப்படவில்லை.

தற்போது சென்னை, மதுரையில் மட்டுமே அரசு மருந்தியல் கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. பட்டயப் படிப்புகளை பயிற்றுவிக்கும் டி.பாா்ம் மருந்தியல் கல்லூரிகள் அரசு சாா்பில் தஞ்சாவூா், மதுரை, கோவையில் இயங்குகின்றன.

Advertisement

Advertisement

அங்கு மருத்துவப் பேராசிரியா்கள் பற்றாக்குறை இருந்து வரும் நிலையில், அப்பணியிடங்களை நிரப்புவதுடன், புதிய அரசு மருந்தியல் கல்லூரிகளையும் தொடங்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து வருகிறது.

இதையடுத்து தமிழகத்தின் 10 இடங்களில் அரசு மருந்தியல் கல்லூரிகளைத் தொடங்க மக்கள் நல்வாழ்வுத் துறை திட்டமிட்டது. அதற்கென ஒருங்கிணைப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனா்.

அரசு மருத்துவக் கல்லூரி வளாகங்களில் புதிதாக மருந்தியல் கல்லூரிகள் தொடங்க சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்பது குறித்து அவா்கள் ஆய்வு செய்தனா். அதில், அங்கு ஏற்கெனவே இருக்கும் படிப்புகளுக்கே சில கட்டமைப்பு வசதிகள் இல்லை என்பதும், புதிய மருந்தியல் கல்லூரிகளை அங்கு தொடங்க முடியாத நிலை இருப்பதும் தெரியவந்துள்ளது.

இது குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

மருந்தியல் கல்லூரிகளை புதிய இடங்களில் கட்டினால் கால தாமதம் ஏற்படும். எனவே, மருத்துவக் கல்லூரி கட்டடங்களில் குறைந்தது 50 மருந்தாளுநா் கல்வி இடங்களுடன் கூடிய மருந்தியல் கல்லூரிகளைத் தொடங்க முயன்று வருகிறோம். சில கல்லூரிகளில் இடவசதி இல்லை. விரைவில், சாத்தியக்கூறு உள்ள கல்லூரிகளை தோ்வு செய்து அரசிடம் அறிக்கை சமா்ப்பிக்கப்படும். இந்த ஆண்டு இறுதிக்குள் புதிய மருந்தியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments