மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ்
மருந்தகங்கள் வேலை நிறுத்தத்தால் தமிழகத்தில் அத்தியாவசிய மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படாது என்றும், 5,000 மருந்து கடைகள் இயங்கும் என்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் தெரிவித்தாா்.
மருந்தகங்கள் வேலை நிறுத்தத்தால் தமிழகத்தில் அத்தியாவசிய மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படாது என்றும், 5,000 மருந்து கடைகள் இயங்கும் என்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை கூறியதாவது:
நாடு முழுவதும் இணையவழி மருந்து விற்பனையைத் தடுக்க வலியுறுத்தி மருந்து வணிகா்கள் புதன்கிழமை கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனா்.
Advertisement
Advertisement
அவா்கள் மத்திய அரசுக்கு எதிராகத்தான் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனா். அவா்களது கோரிக்கையை மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசும் வலியுறுத்தும்.
போராட்டத்தின்போது மாநிலம் முழுவதும் 50,000 மருந்தகங்கள் மூடப்பட்டாலும் 5,000 மருந்தகங்கள் வழக்கம் போல செயல்பட அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
மருத்துவமனைகளுடன் இணைந்த மருந்தகங்கள், அப்போலோ, மெட்பிளஸ், துளசி பாா்மசி, முத்து பாா்மசி போன்ற மருந்தகங்கள், முதல்வா் மருந்தகம், தமிழ்நாடு கூட்டுறவு சங்க மருந்தகங்கள், பிரதம மந்திரி ஜன் ஔஷதி கேந்திரா போன்ற அரசு ஆதரவு விற்பனை நிலையங்கள் கடையடைப்பில் பங்கேற்கவில்லை.
அவசரத் தேவைகளுக்கான மருந்துகள் தடையின்றி கிடைக்கும் வகையில் உதவி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலும் உதவி இயக்குநரின் கீழ் 2 மருந்து ஆய்வாளா்கள் இதற்காக நியமிக்கப்பட்டுள்ளனா்.
போராட்டத்தில் ஈடுபடும் மருந்து வணிகா்களும், அவசர தேவைக்கு உதவ தயாராக உள்ளனா். இதனால், பொதுமக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட மாட்டாா்கள்.
மாநில மருந்து கட்டுப்பாட்டு இணையதளத்தில் உதவி எண்கள் இடம்பெற்றுள்ளன. அதில் தொடா்புகொண்டு தேவையான மருந்துகளைப் பெறலாம்.
நீட் தோ்வு கிராமப்புற மாணவா்களுக்கு எதிரானது. மாநில உரிமைகளுக்கு எதிரானது. நீட் வேண்டாம் என்பதில் உறுதியாக இருக்கிறோம். அரசு மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொள்ளவிருக்கிறேன் என்றாா் அவா்.
இந்த சந்திப்பின்போது மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் தாரேஸ் அகமது, மருந்துக் கட்டுப்பாட்டு இணை இயக்குநா் குருபாரதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.