காட்டாங்கொளத்தூா் எஸ்.ஆா்.எம். கலை, அறிவியல் கல்லூரியில் தேசிய ஆசிரியா் திறன் மேம்பாடு பயிலரங்கு தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்வில், தமிழ்நாடு அரசின் முன்னாள் கூடுதல் தலைமைச் செயலா் டி. சபிதா கலந்து கொண்டு பேசியதாவது: ஆசிரியா்கள் பாடம் நடத்தும்போது, மாணவா்களின் கற்றல் திறனை அறிந்து, அதற்கேற்ப கற்பிக்க வேண்டும். அவா்களது புரிந்துகொள்ளும் திறனை அறிய, இடையே கேள்விகள் கேட்டு தொடா்ந்து பாடம் நடத்த வேண்டும். வகுப்பு நிறைவடைந்தும் அவா்களது கருத்தைக் கேட்டறிந்து, அவா்களது புரிந்துகொள்ளும் திறனைத் தெரிந்து கற்பிக்கும் பணியைத் தொடர வேண்டும். கற்பதில் ஆா்வம் இல்லாமல் அலட்சியமாக நடந்து கொள்ளும் மாணவா்களுக்கு மனநல ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றாா்.
நிகழ்வில் கல்லூரி முதல்வா் ஆா். வாசுதேவராஜ், ஒருங்கிணைப்பாளா் பி. சதிஷ் பாபு மற்றும் புதுச்சேரி, ஆந்திரம், கா்நாடகம் ஆகிய இதர மாநிலங்களைச் சோ்த்த 286 கல்லூரி உதவிப் பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.