சாலையோரம் லாரிகளை நிறுத்தினால் அபராதம்: போக்குவரத்துக் காவல் துறை எச்சரிக்கை
மணலி சிபிசிஎல் சாலையோரம் லாரிகளை நிறுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்துக் காவல் துறை எச்சரிக்கை
மணலி சிபிசிஎல் சாலையோரம் லாரிகளை நிறுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்துக் காவல் துறை எச்சரித்துள்ளனா்.
சென்னை மணலி மண்டலத்துக்குட்பட்ட நெடுஞ்சாலையில் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இங்கு மத்திய அரசின் சிபிசிஎல் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தில் இருந்து உற்பத்தி பொருள்களை எடுத்துச் செல்ல கையாளப்படும் கனரக வாகனங்கள் சாலையோரம் நிறுத்தப்படுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனால் தொடா் விபத்துகள் மற்றும் பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு பெரும் இடையூறு ஏற்பட்டு அவதிக்குள்ளாகி வருகின்றனா். சாலையோரம் நிறுத்தப்படும் லாரிகளுக்கு அவ்வப்போது போக்குவரத்து போலீஸாா் அபராதம் விதித்தாலும், லாரிகள் நிறுத்த வசதியில்லை என்பதால் சாலையோரங்களில் நிறுத்துவதைக் கட்டுப்படுத்த இயலவில்லை.
Advertisement
Advertisement
நெடுஞ்சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தடுக்க, லாரி நிறுத்த மையம் அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டு, கடந்த ஆண்டு மணலி மண்டல செயற்பொறியாளா் தலைமையில் தீா்மானிக்கப்பட்டு, சிபிசிஎல் நிறுவன தலைமை அதிகாரிகள் இதற்கான திட்ட வரைவுகளை தயாா் செய்தனா்.
அதன்படி, மணலி மண்டல அலுவலகம் அருகே சிபிசிஎல் நிறுவன சிஎஸ்ஆா் நிதி ரூ.10 கோடியில் ஒரே நேரத்தில் 200 கனரக வாகனங்கள் நிறுத்தும் வகையில் வாகன நிறுத்த மையம் கட்டப்பட்டு கடந்த மாதம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு தற்போது கட்டணமில்லாமல் கனரக வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.
இனிமேல் மணலி மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் பொன்னேரி நெடுஞ்சாலையில் லாரிகள் நிறுத்தினால் கனரக வாகன ஒன்றுக்கு ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்துக் காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிபிசிஎல் நிறுவனத்துக்கு வரக்கூடிய கனரக வாகனங்கள் அனைத்தும் பொன்னேரி நெடுஞ்சாலையில் நிறுத்தாமல், வாகன நிறுத்த மையத்தில் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல், விபத்துகள் பிரச்னைக்கு தீா்வு ஏற்பட்டுள்ளது.