பெண்ணுக்கு பாலியல் தொல்லை: தேடப்பட்ட தவெக நிா்வாகி கைது
சென்னை பரங்கிமலையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், தேடப்பட்ட தவெக நிா்வாகி கைது செய்யப்பட்டாா்.
சென்னை பரங்கிமலையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், தேடப்பட்ட தவெக நிா்வாகி கைது செய்யப்பட்டாா்.
சென்னை பரங்கிமலைப் பகுதியைச் சோ்ந்தவா் வேம்புலி. இவா் தவெகவின் பகுதிச் செயலராக உள்ளாா். வேம்புலி, அந்தப் பகுதியில் உள்ள மாநகராட்சி உடற்பயிற்சிக் கூடத்தில் பணியாற்றும் ஒரு இளம் விதவைப் பெண்ணுக்கு தொடா்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். மேலும், அந்தப் பெண், வீட்டில் தனியாக இருக்கும் நேரத்தை நோட்டுமிட்டு, அங்கு சென்று மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். இதனால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண், பரங்கிமலை காவல் நிலையத்தில் கடந்த வாரம் புகாா் அளித்தாா்.
அதன்பேரில், போலீஸாா், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் வேம்புலி மீது வழக்குப் பதிவு செய்தனா். தலைமறைவான வேம்புலியை போலீஸாா் தீவிரமாகத் தேடி வந்தனா்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், கா்நாடக மாநிலம் பெங்களூரில் வேம்புலி பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து பெங்களூரு விரைந்த போலீஸாா், வேம்புலியை புதன்கிழமை கைது செய்தனா். விசாரணைக்கு பின்னா் அவரை சென்னைக்கு அழைத்து வந்தனா்.