ரூ. 50,000 லஞ்சம்: மின்வாரிய அலுவலக ஊழியர் கைது
சென்னையில் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக தமிழக மின்வாரிய அலுவலக ஊழியர் கைது செய்யப்பட்டார்.
சென்னையில் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக தமிழக மின்வாரிய அலுவலக ஊழியர் கைது செய்யப்பட்டார்.
தமிழக மின்சார வாரியத்தின் பெசன்ட்நகர் உதவி பொறியாளராக பணியாற்றிய பாலசுப்பிரமணியன் மீது கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20}ஆம் தேதி ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக லஞ்சம் மற்றும் ஊழல் கண்காணிப்புப் பிரிவு வழக்குப் பதிவு செய்தது.
இதன் விளைவாக பாலசுப்பிரமணியன், பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் பாலசுப்பிரமணியனுக்கு எதிரான பணியிடை நீக்க நடவடிக்கை கடந்த 12}ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து பாலசுப்பிரமணியன், மீண்டும் பணியில் சேர்வதற்கான உத்தரவை சென்னை அண்ணா சாலையில் உள்ள அந்த துறையின் பணியாளர் பிரிவு தலைமை பொறியாளர் அலுவலகத்தில் இருந்து பெற வேண்டியிருந்தது.
Advertisement
Advertisement
இதற்காக பாலசுப்பிரமணியன், அந்த அலுவலகத்தின் தமிழ்நாடு மின்சார வாரிய ஒழுங்கு நடவடிக்கை பிரிவில் உதவியாளராக பணியாற்றும் பாலாஜியை அணுகினார். அப்போது பாலாஜி, பாலசுப்பிரமணியத்திடம் ரூ.1.50 லட்சம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இருவருக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில், லஞ்சத் தொகை ரூ.1.30 லட்சமாக குறைக்கப்பட்டதாம்.
இதில், முதல்கட்டமாக ரூ.50 ஆயிரம் லஞ்சப் பணத்தை திங்கள்கிழமை தருமாறு பாலாஜி கேட்டாராம்.
ஆனால், லஞ்சம் வழங்க விரும்பாத பாலசுப்பிரமணியன், இது தொடர்பாக தமிழக லஞ்சம் மற்றும் ஊழல் கண்காணிப்பு பிரிவில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் அப் பிரிவு அதிகாரிகள், பாலசுப்பிரமணியத்திடம் ரசாயனம் தடயவிய ரூ.50 ஆயிரத்தை கொடுத்து, அதை பாலாஜியிடம் வழங்குமாறு கூறி அனுப்பினர். அதன்படி பாலசுப்பிரமணியன், பாலாஜியிடம் அவரது அலுவலகத்தில் அந்த பணத்தை கொடுத்தார்.
அந்த பணத்தை பாலாஜி பெற்றதும், அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்து, மேலும் விசாரணை நடைபெறுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.