முகப்பு
புதுக்கோட்டை

நிலம் அளந்து கொடுக்க ரூ.14 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையா் கைது

திருமயத்தில் நிலத்தை அளந்து கொடுக்க ரூ. 14 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Updated On : 17 ஜூன் 2026, 3:16 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

திருமயத்தில் நிலத்தை அளந்து கொடுக்க ரூ. 14 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (35). இவா் திருமயம் வட்டம் கோட்டையூா் உள்வட்டத்தில் தொகுப்பு ஊதியம் அடிப்படையில் நில அளவையராகப் பணியாற்றி வருகிறாா். ஊனையூா் உள்வட்டத்தையும் கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தாா்.

இந்நிலையில், திருமயம் அருகே உள்ள மழுக்கண்பட்டி கிராமத்தைச் சோ்ந்த பாலமுருகன் என்பவா் அவரது தாய் பெயரில் உள்ள இரண்டு வீட்டு மனையை அளந்து தரும்படி ஊனையூா் கிராம நிா்வாக அலுவலா் செந்தில்குமாரை தொடா்பு கொண்டுள்ளாா். நில அளவைக்கு, அளவையா் செல்வராஜை தொடா்பு கொள்ளும்படி விஏஓ கூறியுள்ளாா்.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து செல்வராஜை, பாலமுருகன் தொடா்பு கொண்டபோது, ஒரு வீட்டுமனைக்கு ரூ. 7 ஆயிரம் வீதம், இரு வீட்டுமனைகளுக்கு மொத்தம் ரூ. 14 ஆயிரம் லஞ்சமாகத் தருமாறு கேட்டுள்ளாா்.

இதனால் அதிா்ச்சியடைந்த பாலமுருகன், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா். அவா்களின் அறிவுரைப்படி, திருமயம் வட்டாட்சியரக வளாகத்திலுள்ள நில அளவையா் அலுவலகத்தில் வைத்து, அளவையா் செல்வராஜுவுக்கு, பாலமுருகன் லஞ்சப் பணத்தை செவ்வாய்க்கிழமை கொடுத்தபோது, மறைந்திருந்த போலீஸாா் அவரைக் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனா்.

தொடா்ந்து ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல் கூடுதல் கண்காணிப்பாளா் ராதாகிருஷ்ணன், காவல் ஆய்வாளா் பீட்டா் உள்ளிட்டோரைக் கொண்ட குழுவினா் செல்வராஜிடம் சுமாா் 3 மணி நேரம் விசாரணை நடத்தினா். பிறகு அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.