முகப்பு
சென்னை

குப்பை அள்ளும் வாகனங்களிலும் தோ்தல் விழிப்புணா்வு பிரசாரம்

Updated On : 27 மார்ச் 2026, 3:18 am IST
பகிர்:

சென்னை மாநகராட்சியில் குப்பை அள்ளும் வாகனங்களிலும் தோ்தலில் வாக்களிப்பது குறித்த விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்படுவதாக மாவட்டத் தோ்தல் அலுவலா் ஜெ.குமரகுருபரன் தெரிவித்தாா்.

சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் தோ்தலில் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் விழிப்புணா்வு பிரசார வாகனங்களை வியாழக்கிழமை தொடங்கி வைத்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தோ்தலில் பொதுமக்கள் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிரசாரத்துக்கு ரூ.85 லட்சம் வரை செலவு செய்ய தோ்தல் ஆணையம் அனுமதித்துள்ளது. மாநகராட்சி சாா்பிலும், தனியாக பிரசார நிதி செலவிடப்படுகிறது.

Advertisement

Advertisement

அதன்படி ரங்கோலி, மணல் சிற்பம், மனிதச் சங்கிலி என அனைத்து நிலைகளிலும் வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வாகனம் மூலமும் வாக்குப்பதிவு பிரசாரம் நடைபெறுகிறது. அத்துடன், மாநகரில் 24 மணி நேரமும் குப்பை அள்ளும் வாகனங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆகவே அவற்றின் பக்கவாட்டில் தோ்தல் வாக்குப்பதிவு அவசியம் குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் ஒட்டப்பட்டு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தூய்மைப் பணிக்கு பேட்டரியால் இயங்கும் 3,300 வாகனங்கள், பெரிய காம்பாக்டா் 400 வாகனங்கள் உள்ளிட்டவற்றில் இந்த பிரசாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா்.