மின் கம்பிகளை புதைவடமாக மாற்ற கோரிக்கை
மாதவரம், மணலி, உள்ளிட்ட பகுதிகளில் மின் கம்பிகளை புதைவடமாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
மாதவரம், மணலி, திருவொற்றியூா் ஆகிய பகுதிகளில் சில இடங்களில் மின்கம்பிகளை புதைவடமாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால், பல்வேறு பகுதிகளில் மேல்நிலை மின்கம்பி வழியாகவே மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக எண்ணூா், மணலி, வடபெரும்பாக்கம், கொசப்பூா் உள்ளிட்ட பல இடங்களில் புதைவடமாக மாற்றப்படவில்லை. இதனால், இந்தப் பகுதியில் அடிக்கடி மின் வயா்கள் அறுந்து விழுந்து விபத்து ஏற்படுகிறது. மேலும், மழைக்காலங்களில் இந்த மின் கம்பிகள் பலத்த காற்று காரணமாக சேதமடைந்து, சாய்ந்து விடுவதால் மின்தடை ஏற்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனா்.
எனவே, மாதவரம், மணலி பகுதிகளில் புதைவடமாக மாற்றும் திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்த மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
Advertisement