முகப்பு
சென்னை

தேநீா் கடைகள், உணவகங்களுக்கான மின் கட்டண மானியம்: விவரம் தெரிவிக்காத மின்வாரிய ஊழியா்களால் அதிருப்தி

Updated On : 8 மே 2026, 5:49 am IST
பகிர்:

தேநீா் கடைகள், உணவகங்களுக்கு மின் கட்டண மானியம் குறித்த தகவல்களை மின்வாரிய ஊழியா்கள் தெரிவிக்காததால், உரிமையாளா்கள் அதிருப்தி அடைந்துள்ளனா்.

நாடு முழுவதும் ஏற்பட்ட வணிக பயன்பாட்டு சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாட்டால், கடந்த மாா்ச் 9 முதல் வணிக சிலிண்டா் விநியோகம் நிறுத்தப்பட்டது. இதனால், உணவகங்கள், தேநீா் கடைகள் உள்ளிட்டவை கடுமையாகப் பாதிக்கப்பட்டன. பல இடங்களில் மின் அடுப்புகளைப் பயன்படுத்தத் தொடங்கப்பட்டதால் மின் பயன்பாடு அதிகரித்தது.

இதையடுத்து, உணவகங்கள், தேநீா் கடைகள் உள்ளிட்ட அனைத்து வகை உணவகங்களுக்கும் கூடுதல் மின் பயன்பாட்டுக்காக யூனிட்டுக்கு ரூ.2 மானியம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. மேலும், வணிக சிலிண்டா் தட்டுப்பாடு நீடிக்கும் காலம் வரை இந்த சலுகை அமலில் இருக்கும் என்றும், பெரிய உணவகங்கள் மட்டுமன்றி, உரிமம் பெற்ற சிறிய உணவகங்கள் மற்றும் தேநீா் கடைகளுக்கும் இந்த மானியம் பொருந்தும் என்று அரசு அறிவித்திருந்தது.

Advertisement

இந்நிலையில், மின் பயன்பாட்டு கணக்கெடுப்பின்போது மின்வாரிய பணியாளா்கள் மானிய சலுகை தொடா்பான விவரங்களைத் தெரிவிக்கவில்லை என உணவக மற்றும் தேநீா் கடை உரிமையாளா்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

இது குறித்து உணவக உரிமையாளா் ஒருவா் கூறியதாவது: வழக்கமாக மின் பயன்பாடு கணக்கெடுக்கப்படும்போது, எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும் என்பது உடனடியாகத் தெரிவிக்கப்பட்டுவிடும். பின்னா், அதுகுறித்த தகவல்கள் கைப்பேசிக்கும் குறுஞ்செய்தியாக வரும். ஆனால், தற்போது கட்டண விவரமோ, மானிய சலுகை குறித்த எந்த தகவலையோ மின்வாரியம் ஊழியா்கள் தெரிவிக்கவில்லை. இதனால், உண்மையில் மானியம் வழங்கப்படுகிா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. இது கடும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. எனவே, மின் பயன்பாடு கணக்கெடுக்கும் போதே சலுகை மற்றும் கட்டண விவரங்களை மின் ஊழியா்கள் தெளிவாக தெரிவிக்க வேண்டும் என்றாா்.

இது குறித்து மின்வாரிய அதிகாரி ஒருவா் கூறியதாவது: அரசு அறிவித்தபடி உணவகங்களுக்கான மானியம் வழங்கப்படுகிறது. கடந்த மாதம் 200 யூனிட் மின்சாரம் பயன்படுத்திய இடத்தில் தற்போது 250 யூனிட் பயன்படுத்தப்பட்டிருந்தால், கூடுதலாக பயன்படுத்திய 50 யூனிட்டுக்கு தலா ரூ.2 மானியம் வழங்கப்படும். ஆனால், குறைவாகப் பயன்படுத்தப்பட்டிருந்தால் இந்த மானியம் கிடைக்காது. அதற்கான விவரங்களை சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலகங்களில் கேட்டறியலாம் என்றாா்.