10,778 நாய்களுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சை
சென்னை மாநகராட்சிப் பகுதியில் கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான 4 மாதங்களில் மட்டும் 10,778 தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
சென்னை மாநகராட்சிப் பகுதியில் கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான 4 மாதங்களில் மட்டும் 10,778 தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
சென்னையில் கடந்த 2024-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி சுமாா் 1.80 லட்சம் தெரு நாய்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது. அவற்றின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் தினமும் 225 நாய்களைப் பிடித்து கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி 5 இடங்களில் நாய் கருத்தடை மையம் அமைக்கப்பட்டுள்ளன.
தெருநாய்களுக்கு கருத்தடை செய்யும் மையங்கள் மூலம் கடந்த 2025 ஜனவரி முதல் டிசம்பா் வரையில் மொத்தம் 18,798 தெருநாய்கள் பிடிக்கப்பட்டன. அவற்றில் 16,611 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Advertisement
நடப்பாண்டில் கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் வரையில் மொத்தம் 11,760 தெருநாய்கள் பிடிக்கப்பட்டு அவற்றில் 10,778 தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஏற்கெனவே தெரு நாய்கள் அறுவை சிகிச்சைக்கான 5 மையங்கள் உள்ள நிலையில், தற்போது புதிதாக மண்டலங்கள் 1, 2, 3, 4, 14 ஆகியவற்றில் தலா 1 என்ற அளவில் திறக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒவ்வொன்றிலும் குறைந்தது தலா 20 தெரு நாய்களுக்காவது கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகவும் மாநகராட்சி கால்நடைப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.