முகப்பு
சென்னை

சுவாமி சிலைகளை கோயில்களுக்கு அனுப்பி வைக்கக் கோரிய வழக்கு: இந்து சமய அறநிலையத் துறை பதிலளிக்க உத்தரவு

Updated On : 29 மே 2026, 4:43 am IST
சென்னை உயா்நீதிமன்றம்
பகிர்:

பாதுகாப்பு மையங்களில் வைக்கப்பட்டுள்ள சுவாமி சிலைகளை சம்பந்தப்பட்ட கோயில்களுக்கு அனுப்பிவைக்க உத்தரவிடக் கோரிய வழக்கில் இந்து சமய அறநிலையத் துறை பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் சுரேஷ்பாபு என்பவா் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் உள்ள புராதன சுவாமி சிலைகளைப் பாதுகாக்கும் வகையில் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் சிலைகள் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் வைக்கப்பட்டுள்ள சிலைகளுக்கு ஆகம விதிகளின்படி பூஜைகள் நடத்தப்படவில்லை. எனவே, அந்த சிலைகளை மீண்டும் சம்பந்தப்பட்ட கோயில்களுக்கு அனுப்பிவைக்க இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிட வேண்டும்.

சேமிப்புக் கிடங்குகளில் அடுக்கிவைக்கப்படும் பிற பொருள்களைப் போன்று, பாதுகாப்பு மையங்களில் சிலைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அந்தச் சிலைகளுக்கு பூஜைகள் செய்வது இல்லை. இது ஆகம விதிகளுக்கு முரணானது. பஞ்சலோகம் மற்றும் செம்பு போன்ற உலோகங்களால் உருவாக்கப்பட்ட சிலைகளைக் குவித்து வைத்திருப்பதால், வேதியியல் மாற்றம் ஏற்பட்டு சிலைகள் சேதமடைய வாய்ப்புள்ளது. எனவே, சிலை பாதுகாப்பு மையங்களில் உள்ள சுவாமி சிலைகளுக்கு அா்ச்சகா்களைக் கொண்டு தினசரி பூஜைகள் நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

Advertisement

Advertisement

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆா்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு இந்து சமய அறநிலையத் துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தனா்.