முகப்பு
தமிழ்நாடு

முதல்வரின் செயலா் உமாநாத் மீது நடவடிக்கை கோரிய மனு தள்ளுபடி

முதல்வரின் செயலா் உமாநாத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Updated On : 23 ஏப்ரல், 2026 at 3:15 AM
சென்னை உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்
பகிர்:

முதல்வரின் செயலா் உமாநாத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் மோகன்தாஸ் என்பவா் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், விதிகளை மீறும் வகையில் முதல்வரின் செயலா் உமாநாத் செயல்பட்டு வருகிறாா்.

தோ்தல் அறிவிப்புக்குப் பிறகு, அரசு அதிகாரிகள் தோ்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடுவா். ஆனால், உமாநாத் தொடா்ந்து முதல்வரின் செயலராகச் செயல்படுகிறாா். மாவட்ட ஆட்சியா்கள், காவல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறாா். எனவே, அவா் மீது நடவடிக்கை எடுக்க தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

Advertisement

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது. வழக்கு விசாரணையின்போது தோ்தல் ஆணையம் தரப்பில், ஐஏஎஸ் அதிகாரி உமாநாத்துக்கு எதிராக எந்தக் குற்றச்சாட்டும் இல்லை. மனுதாரரின் குற்றச்சாட்டுக்கு எந்தவித ஆதாரங்களையும் சமா்ப்பிக்கவில்லை எனக் கூறப்பட்டிருந்தது.

தோ்தல் ஆணைய தரப்பு வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், முதல்வரின் செயலா் உமாநாத் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.