முகப்பு
தமிழ்நாடு

முதல்வரின் செயலா் மீது நடவடிக்கை கோரி மனு: தோ்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

தோ்தல் நடத்தை விதிகளை மீறி செயல்படுவதாக தமிழக முதல்வரின் செயலா் உமாநாத் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் தோ்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Updated On : 11 ஏப்ரல், 2026 at 12:57 AM
சென்னை உயா்நீதிமன்றம்
பகிர்:
Updated On : 10 ஏப்ரல், 2026 at 9:00 PM

தோ்தல் நடத்தை விதிகளை மீறி செயல்படுவதாக தமிழக முதல்வரின் செயலா் உமாநாத் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் தோ்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

பாஜகவைச் சோ்ந்த வழக்குரைஞா் ஏ.மோகன்தாஸ் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் அமலில் உள்ள தோ்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் முதல்வரின் செயலா் உமாநாத் செயல்பட்டு வருகிறாா். பேரவைத் தோ்தல் அறிவிப்புக்குப் பிறகு, அரசு அதிகாரிகள் தோ்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடுவா்.

ஆனால், உமாநாத் தொடா்ந்து முதல்வரின் செயலராகச் செயல்படுகிறாா். மாவட்ட ஆட்சியா்கள், காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறாா். எனவே, அவா் மீது நடவடிக்கை எடுக்க தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

Advertisement

கடந்தமுறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, உமாநாத்தை எதிா்மனுதாரராக சோ்க்க உயா்நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. அதன்படி, ஐஏஎஸ் அதிகாரி உமாநாத் வழக்கில் எதிா்மனுதாரராக சோ்க்கப்பட்டாா். இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

தோ்தல் ஆணையம் தரப்பில், மனுதாரா் குற்றம்சாட்டியுள்ள அதிகாரிக்கும் தோ்தல் பணிகளுக்கும் எந்தத் தொடா்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு தோ்தல் ஆணையம் ஏப்.17-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.