பறவைகளின் எண்ணிக்கை குறைந்ததால் பட்டாசு வெடித்த வேடந்தாங்கல் மக்கள்
வேடந்தாங்கலில் போதிய பறவைகளும், போதிய நீரும் இல்லாததால் இந்த ஆண்டு இப்பகுதி மக்கள் தீபாவளிப் பண்டிகைக்காக பட்டாசு வெடித்துக் கொண்டாடுகின்றனர்.
வேடந்தாங்கலில் போதிய பறவைகளும், போதிய நீரும் இல்லாததால் இந்த ஆண்டு இப்பகுதி மக்கள் தீபாவளிப் பண்டிகைக்காக பட்டாசு வெடித்துக் கொண்டாடுகின்றனர்.
தமிழகத்தின் முக்கிய பறவைகள் சரணாலயமாகத் திகழும் வேடந்தாங்கல் பகுதியில் அதிக அளவிலான பறவைகள் வருவது வழக்கமாக இருந்தது. அந்தப் பறவைகளுக்கு எத்தகைய இடைஞ்சலும் ஏற்படக் கூடாது என்று இப்பகுதி மக்கள் ஒருமித்த கருத்துடன் இருந்தனர். இதனால் அவர்கள் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்காமல் இருப்பது வழக்கம். வெடி வெடிக்காத கிராமம் என அழைக்கப்பட்டது. சில ஆண்டுகளில் தீபாவளிப் பண்டிகை நேரத்தில் இங்குள்ள மக்கள் அதிக சத்தமுள்ள மற்றும் அதிக வெளிச்சத்தை ஏற்படுத்தும் பட்டாசுகளை வெடிக்காமல் இருந்து வந்தனர்.
இந்நிலையில், வேடந்தாங்கல் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் அதிக மழை இல்லாததால் இங்குள்ள ஏரிக்கு போதிய மழைநீர்வராமல் இருந்தது. அதனால் ஏரியில் நீர் இல்லாமல் காணப்படுகிறது. ஆயிரக்கணக்கான பறவைகள் இருந்து வந்த சரணாலயத்தில் தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட பறவைகளே உள்ளன.
அதனால், இப்பகுதி மக்கள் இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையை பட்டாசுகளை வெடித்தும், அதிக வெளிச்சமுள்ள கலசம், புஸ்வாணம் போன்றவற்றைக் கொளுத்தியும், வானுயர்ந்து சென்று வெடிக்கும் ராக்கெட் போன்றவற்றை வெடித்து வருகின்றனர். மக்களின் மன மாற்றத்துக்கு ஏரியில் நீர் இல்லாததும், போதிய மழை பெய்யாததும், பறவைகள் சீசன் இல்லாததும்தான் முக்கிய காரணம் எனத் தெரிய வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.