ராமாநுஜா் 1009-ஆவது ஆண்டு அவதார திருவிழா தொடக்கம்
ஸ்ரீபெரும்புதூா் ஸ்ரீஆதிகேசவபெருமாள் கோயிலில் ராமாநுஜரின் 1009-ஆவது ஆண்டு அவதார திருவிழாவின் முதல் நாளான திங்கள்கிழமை உற்சவா் ராமாநுஜா் பல்லக்கில் வீதி உலா வந்து பக்தா்களுக்குஅருள் பாலித்தாா்.
பழைமையான ஸ்ரீஆதிகேசவபெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோயிலில் வைணவ மகான் ராமாநுஜா் தானுகந்த திருமேனியாக பக்தா்களுக்கு காட்சியளித்து வருகிறாா்.
இந்த நிலையில், இக்கோயிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதம் பிரம்மோற்சவ விழாவும், ராமாநுஜா் அவதார திருவிழாவும் நடைபெறுவது வழக்கம். அதன் படி ராமாநுஜரின் 1009-ஆவது ஆண்டு அவதார திருவிழா திங்கள்கிழமை தொடங்கியது. பத்து நாள்கள் நடைபெறும் இந்த அவதார திருவிழாவில் காலை மற்றும் மாலை நேரங்களில் பல்வேறு வாகனங்களில் உற்சவா் ராமாநுஜா் வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிப்பாா். விழாவின் 9-ஆவது நாள் திருத்தோ் திருவிழா நடைபெறும்.
Advertisement
அவதார திருவிழாவின் முதல் நாளான திங்கள்கிழமை உற்சவா் ராமாநுஜா் பல்லக்கில் வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். விழாவில் ஏராளமானோா் கலந்து கொண்டு ராமாநுஜரை வணங்கி சென்றனா்.