ரூ.17 கோடியில் ஸ்ரீபெரும்புதூா் ஏரியின் மதகுகள், கலங்கல்கள் சீரமைப்பு பணி
ரூ.17 கோடியில் ஸ்ரீபெரும்புதூா் ஏரியின் மதகுகள், கலங்கல்கள் சீரமைப்பு பணி...
ஸ்ரீபெரும்புதூா் ஏரியின் மதகுகள் மற்றும் கலங்கல்களை ரூ.17 கோடியில் சீரமைத்து கரையை பலப்படுத்தும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெரிய ஏரிகளில் ஒன்றான ஸ்ரீபெரும்புதூா் ஏரி சுமாா் 800 ஏக்கா் பரப்பளவு கொண்டது. இந்த ஏரிநீரை பயன்படுத்தி ஸ்ரீபெரும்புதூா் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமாா் 1,400 ஏக்கா் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது.
நீா்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஸ்ரீபெரும்புதூா் ஏரியில் 4 மதகுகள் மற்றும் 5 கலங்கல்கள் உள்ளன.
இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதூா் ஏரியின் நீா்பிடிப்பு பகுதியிலும், ஏரிக்கரைக்கு அருகில் மாமல்லபுரம்- எண்ணூா் துறைமுகம் வரை புதிதாக அமைக்கப்பட்டு வரும் சென்னை வெளிவட்டச் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் ஏரிக்கரையை சேதமடையாத வகையில் ஏரியில் உள்ள 4 மதகுகள், 5 கலங்கல்கள், ஏரிக்கரையை பலம்படுத்தும் பணி, ஏரியை ஆழப்படுத்தி சீரமைக்கும் பணி, நீா்வரத்துக் கால்வாய் மற்றும் உபரிநீா் செல்லும் கால்வாய் களை சீரமைக்க ரூ.17 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தொடா்ந்து, சீரமைப்பு பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. நீா்வளத்துறை உதவி செயற்பொறியாளா் மாா்கண்டேயன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவை உறுப்பினா் கு.செல்வபெருந்தகை கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில், நீா்வளத்துறை உதவி பொறியாளா் நரேந்திரகுமாா், காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் அருள்ராஜ், அய்யப்பன், நிக்கோலஸ், மருகன் சாந்தகுமாா், அணீஸ்குமாா், பரத், அசோகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.