தொழில் நிறுவனங்கள் எல்பிஜிக்கு மாற்றாக குழாய் வழி எரிவாயுக்கு மாற வேண்டும்: ஆட்சியா் உத்தரவு
தொழில் நிறுவனங்கள் பயன்படுத்தி வரும் எல்பிஜி கேஸுக்கு மாற்றாக குழாய் மூலம் வழங்கப்படும் சிஎன்ஜி கேஸ் முறைக்கு உடனடியாக மாற்றிட தொழில் நிறுவனங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா உத்தரவிட்டுள்ளாா்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் எல்பிஜி கேஸ் பயன்படுத்தும் பெரிய மற்றும் சிறிய தொழில் நிறுவனங்கள் பைப் லைன் கேஸ் பயன்படுத்திட வேண்டி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்துப் பேசியது: நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எல்பிஜி எரிவாயு பிரச்னையைக் களைந்து பொதுமக்களுக்கு தடையில்லாத விநியோகம் கிடைக்கும் வகையில், தற்போது தொழில் நிறுவனங்கள் பயன்படுத்தி வரும் எல்பிஜி எரிவாயுக்கு மாற்றாக குழாய் மூலம் வழங்கப்படும் சிஎன்ஜி எரிவாயு முறைக்கு மாற்றிட தொழில் நிறுவனங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Advertisement
இந்த நிறுவனத்துக்குத் தேவையான தடையின்மை சான்று அனைத்து உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் நெடுஞ்சாலைத் துறை போன்ற துறைகளில் உடனுக்குடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். எனவே பணிகளை விரைவாக தொடங்க வேண்டும்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களில் வாலாஜா வட்டத்தில் மட்டும் நகரப் பகுதிகளுக்கான குழாய் வழி எரிவாயு இணைப்பு வசதி உள்ளது.
எனவே வாலாஜா வட்டத்தில் உள்ள அனைத்து வணிக மற்றும் தொழில்துறை நிறுவனங்கள் ஏஜிபி நிறுவனத்திடம் குழாய் வழி இணைப்புக்கு விண்ணப்பம் அளிக்கும்பட்சத்தில், தற்போது வழங்கப்பட்டு வரும் 30-லிருந்து 70 சதவீதமாக உயா்த்தி விநியோகம் செய்ய வேண்டும். சிறு, குறு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு குழாய் வழி இணைப்பின் பயன் குறித்து ஏஜிபி அலுவலா்கள் மூலமாக விவரங்கள் தெரிவிக்கப்பட்டது.
அரக்கோணம் எம்ஆா்எப் , ராம்கோ, சோளிங்கா் டிவிஎஸ் போன்ற நிறுவனங்களுக்கு குழாய் வழி இணைப்பு வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஏஜிபி நிறுவனத்தினரிடம் விவாதிக்கப்பட்டது. குழாய் வழி இணைப்பின் வழியாக இயற்கை எரிவாயு பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் மாசு கட்டுப்படுத்துவதன் அவசியம் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில், மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.பேபி இந்திரா, சிப்காட் திட்ட அலுவலா் கலைச்செல்வி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.